டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

பூமியிலுள்ள உயிரினங்கள் தங்களுக்கென ஒரு நிரந்தர உருவத்தோடு பிறந்ததில்லை என்பதை உலகிற்கு அறியச்செய்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையிலாளர் சார்லஸ் டார்வின்.

சார்லஸ் டார்வின் இளமைகாலம்.

1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விஞ்ஞானி சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் பிறந்தநாள். தனது அறிவுக் கூர்மையினால் புதிய அறிவியல் கொள்கைகளைக் கண்டுபிடித்து வகுத்தளித்து, மனித சிந்தனையில் புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கிய விஞ்ஞானிகள் ஒரு சிலரே. அவர்களுள் டார்வினும் ஒருவர். உயிர்ப் பரிணாம இயலின் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார். இவரது தாத்தாவும், தந்தையும் மருத்துவர்கள். இவரையும் மருத்துவராக்கவே அவர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் இவரது ஆர்வமோ வேறாக இருந்தது. சிறு வயது முதலே இவர் பூச்சிகள், விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவற்றைப் பிடித்து பரிசோதித்துப் பார்த்துவந்தார். இவரை பாதிரியாராக ஆக்கிவிடலாம் என்று பிறகு முயற்சித்தனர். அதுவும் நடக்கவில்லை. 1831-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து பீகிள் என்ற கப்பல் தென் அமெரிக்காவின் கடல் பகுதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்றது. இந்த கப்பலில் இயற்கை விஞ்ஞானியாக டார்வினும் பயணம் செய்தார். கடல் வழியாகவும், ஆங்காங்கே இறங்கி நிலவழியாகவும் 5 ஆண்டு காலத்திற்கு இவர் மேற்கொண்ட பயணம் மிக முக்கியமான திருப்பமாக அமைந்துவிட்டது. உயிரினங்களிடையே காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பயணத்தின் போது இவர் முயற்சித்தார். எலும்புகள் போன்றவற்றை சேகரித்தார். குறிப்புகளை எழுதி எடுத்துவந்தார். ஒரு தீவுக்கூட்டத்தில் இருக்கும் வெவ்வேறு தீவுகளில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த குருவிகளின் அலகு அமைப்புகள், அவைகளுக்கு ஆங்காங்கே கிடைக்கக்கூடிய உணவுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இருப்பதை அவர் கண்டார்.  மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.

டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.

அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டனபுதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.

தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்இப்போது காணப்படும் அனைத்து வகையான உயிரினங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்திருக்க வில்லை. இவை ஆரம்பகால உயிரினத்திலிருந்து பரிணமித்து ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைவிட்டு வளர்ந்து, வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகி வந்திருக்கின்றன என்பது டார்வினின் கோட்பாடு.  

"டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.

பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.

 

1871-ம் ஆண்டு வெளியான சார்லஸ் டார்வினின் தி டிசன்ட் ஆஃப் மேன்' (‘The Descent of Man’) புத்தகம் இந்த உலகிற்கு உணர்த்த நினைத்தது மனிதனுக்கு, குரங்குகளுக்கும் மூதாதையர் ஒன்றே என்பதைத்தான். இங்குள்ள மதவாதிகள் கருதுவது போல் குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக பரிணாமம் அடைந்தான் என டார்வின் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், ஊர்வன உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு இடையேயான ஒற்றுமையை சுட்டிக் காட்டியதுடன் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையது என்றே அவர் குறிப்பிட்டார். அதாவது, எல்லா பெரிய ஜீவராசிகளும் சிறு உயிரினங்களில் இருந்தே மரபணு உரு இயல் மாற்றங்கள் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.

டார்வின் மறைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில்தான் அவருடைய கோட்பாடுகள் அறிவியல் ஆதாரங்களோடு விளக்கப்பட்டன. டிஎன்ஏ-வின் (deoxyribonucleic  acid) கண்டுபிடிப்பு பலலட்சம்கோடி ஆண்டுகளாக எப்படி மரபணு மாற்றம் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதற்கான விளக்கத்தை நல்கியது. சில உயிரினங்களின் உருவ அமைப்பு படிமங்களுக்கும், அவற்றின் அங்க அமைப்பு படிமங்களுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை டார்வினின் கோட்பாடுகளுக்கு மேலும் வலுசேர்த்தது. அதேபோல் குரங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மரபணு வரிசை ஒத்துப்போனதும் அந்த காலகட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களால் தெரியவந்தது.

மத ரீதியான எதிர்ப்புகள்:

டார்வினின் கோட்பாடுகளுக்கு எப்போதுமே மத ரீதியான எதிர்ப்புகள் இருந்துள்ளது. ஏனெனில், டார்வினின் கோட்பாடுகள் உலகம் இறை சக்தியால் உருவானது என்ற படைப்பாற்றல் கோட்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது. எல்லா, மதநூல்களிலும் இவ்வுலகை மனிதர்கள் இறைவன் படைத்ததாகவே உள்ளது.உயிரினங்கள் ஒவ்வொன்றும் கடவுளால் தனித்தனியாக படைக்கப்பட்டவை என்று மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்பிவந்தனர். மதங்களின் கோட்பாடுகளும் இந்த வகையினதாகவே இருந்தன. மாடுகளின் சாணத்திலிருந்து பூச்சிகள் உருவாகின்றன என்று அவர்கள் நம்பினர். காலகாலமாக நம்பப்பட்டு வந்த இத்தகைய சிந்தனைகளுக்கு மாற்றாக டார்வினின் கோட்பாடுகள் அமைந்தன. படைப்புக்கொள்கை என்பதை மறுத்து பரிணாமக் கொள்கையை டார்வின் முன்வைத்தார். டார்வினுக்கு முன்பாகவே இனம், பேரினம், குடும்பம் என்று விலங்கினங்களும், தாவர இனங்களும் விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டிருந்தன. லாமார்க் என்பவர் பரிணாமக் கோட்பாடுகள் சிலவற்றை டார்வினுக்கு முன்பே கூறியிருந்தார். ஆனாலும், மாறிவரும் சூழல்களில், ஒரு உயிரினம் பரிணாம வளர்ச்சி கண்டு எப்படி பிழைத்து வாழ்கிறது என்பதை டார்வினின் பரிணாமக் கோட்பாடுகள்தான் சிறப்பாக விளக்கின. ‘இயற்கைத்தெரிவு வழிமுறைகளின்படி உயிரினங்களின் தோற்றம்என்ற நூலை டார்வின் 1859-ம் ஆண்டில் வெளியிட்டார். உயிரினங்கள் படிப்படியான சில குறிப்பிட்ட மாற்றங்களை காலஓட்டத்தில் மெல்ல மெல்ல அடைகின்றன என்பது டார்வினின் தத்துவம்.
இந்திய மதவாதிகளின் எதிர்ப்பும் ஏமாற்றும்.
பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை. அதன் அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர். 

இங்கே இந்தியாவில் உள்ள இந்துத்துவாவாதிகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுத்தாலும் மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

கோல்வால்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு மொழி இனம் ஆகியவை ஆரிய இனம். நவீன இந்தியாவின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தையும் இந்துத்துவாவாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். அறிவியலுக்கும் மேலானதாக அவர்கள் மதத்தை வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் பகுத்தறிவு சிந்தனைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர்.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததை யாரும் பார்க்கவில்லை. அதனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்பது அறிவியல்பூர்வவமாக தவறானது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யநாத் சிங் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆக அறிவியலை மறுத்து தாக்குதல் தொடுக்கும் மதவாதிகள் மக்களை மூடர்களாக இருக்க சொல்கின்றனர்.

முதலில் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று எங்காவது குறிப்பிட்டிருக்கிறாரா டார்வின்- இல்லவேயில்லை. டார்வின் மனிதக் குரங்குகளும், மனிதர்களும் ஏற்கனவே வாழ்ந்து மறைந்த மனிதக் குரங்குகளிலிருந்து பரிணமித்திருக்கலாம். மிகவும் சரியாகச் சொன்னால் அவர் வார்த்தைகளிலேயே ““We may infer that some ancient member of the anthromorphous subgroup gave birth to man”” இந்த வாக்கியத்தில் எங்கேயாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா?  

உடற்செயலியல் ரீதியாக, கரு வளர்ச்சியின் போது, உருவ அமைப்பில், ஏன் மரபணுக்களின் செயல்பாட்டில் விலங்குகளுக்கான ஒற்றுமை அமைப்பை வெகுவாக விளக்கிவிட்டார்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்துவிட்டான். அந்தக் குரங்கு ஏன் இன்னொன்றாக பரிணமிக்கவில்லை என்பதும் சிறுபிள்ளைத்தனமான கேள்வியே! இயற்கைத் தேர்வு நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும்கூட டார்வின் குறிப்பிடும் ancient anthropomorphous ancient anthropomorphous group வாழ்ந்த காலம் சமார் 60 இலட்சம் வருடங்களுக்காவது முந்தையது. ஆதித்தாய் என்று கருதப்படும், மனிதனுமல்லாத, மனிதக் குரங்குமல்லாத நிமிர்ந்த நடை பழகிய அர்திபித்திகஸ் ரேமிடஸ் வாழ்ந்த காலம் குறைந்தது 43 இலட்சம் வருடங்கள். இந்த மதவாதிகள் அத்தனை வருடங்கள் வாழ்ந்து விடுவார்களா என்ன அதையெல்லாம் பார்ப்பதற்கு? மனித ஆயுளை வைத்து பரிணாமத்தையெல்லாம் கணித்துவிட முடியாது. இக்கால அறிவியல் சூழல் போலவே தகுதியுள்ளவை தங்கி நிற்கும்’ ((Survival of the fittest)) என்பதும் டார்வினால் வரையறுக்கப்பட்டதல்ல.

டார்வின் சமகாலத்தவரான ஆப்ஃபிரட் ரஸ்ஸல் வாலங் மலாய் தீவுக் கூட்டங்களில் ஆய்வு நடத்தி இந்தக் கோட்பாட்டினை உருவாக்கினார். ‘இயற்கைத் தேர்வுதம் சூழலுடன் மிகச் சிறப்பாக, ஒத்திசைந்துபோகும் உயிர்களே பிழைத்திருக்கும். அவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மரபணு சார்ந்த பண்பியல்புகளை அதிக அளவில் வழங்கும். சரிவர ஒத்திசைந்து போகாதவை வெளியேற்றப்படும் என்பதே இந்த ஆய்வு. இந்த ஆய்வை டார்வின் ஏற்றுக் கொண்டார். அதேபோல இயற்கைத் தேர்விற்கு பாரபட்சம் கிடையாது.

அதுமட்டுமல்ல, அனுகூலமான பண்புகளைக் கொண்ட விலங்குகள் வெற்றிகரமாக வாழ்ந்துவிடும் என்பதும் தவறு.

 

விஞ்ஞானிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு:

மதவாதிகள் மட்டுமல்ல கடந்த காலங்களில் சில விஞ்ஞானிகள்கூட டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். டார்வினின் கோட்பாடுகளை உறுதி செய்யும் அளவுக்கு உயிரிகளின் படிமங்கள் கிடைக்காததையும், வாழும் மற்றும் அழிந்த உயிரினங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மூலக்கூறு உயிரியல் வாயிலாக உறுதிப்படுத்த முடியாததையும் சுட்டிக் காட்டி விஞ்ஞானிகள் டார்வின் கோட்பாட்டை ஏற்க மறுக்கின்றனர்.

அண்மையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் ஜூல்ஸ் ஹோவர்டு எனும் விலங்கியல் நிபுணர், "டார்வினின் கோட்பாடுகள் நாம் இயற்கையில் காணும் பல்வேறு விஷயங்களை விளக்குவதாகவே உள்ளது. ஆனால், இதைவிட துல்லியமாக இப்பூமியில் வாழும் உயிரினங்களின் பன்முகத்தன்மையை விளக்கும் ஓர் ஆய்வறிக்கை வெளிவந்தால் டார்வின் கோட்பாடு அறிவியலில் இருந்து வெளியேற்றப்படும்" எனக் கூறியுள்ளார்.

ஆக இயக்கவியல் என்பதனை நாம் புரிந்துக் கொண்டால் அறிவியல் வளர்ச்சியானது புதிய புதிய கண்டுபிடிப்புகள் போல் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வளர்தெடுக்கும் முயற்ச்சி வரவேற்க்க தக்கவையே.

-சிபி

 



No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...