பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் வைத்திருக்கும் அமைப்பு முறைதான் நாம் வாழும் சமூகம்

இந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கையானது அரசின் உண்மை முகத்தை சுட்டுக்காட்டி உள்ளது அதே வேளையில் அவை மக்களின் இந்த ஏற்ற தாழ்வுக்கு அரசின் கொள்கைதான் என்கிறது. இந்த NGO அமைப்பின் பணியானது அரசை குற்றம் சுமத்தி அமைப்புமுறையை காக்கவே செய்கிறது. உண்மையில் இதற்க்கு காரண்மான அரசமைப்பை தூக்கி எறிய சொல்கிறது மார்க்சிய-லெனினியம் ஆனால் இங்குள்ள திருதல்வாதிகளோ இங்கே இந்த அமைப்பு முறையை பைய பைய சோசலிசமாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டுள்ளனர். குறுங்குழுவாதிகளாகி போன புரட்சியாளர்களோ தனித்தனியாகி ஆளுக்கு ஒரு கட்சி என்றாகி; யாருமே இந்த பிரச்சினைக்கு தலைமை தாங்க திறனற்று கிடக்கின்றனர்..... சிந்திப்போம் சரியான மார்க்சிய வழியில் பயணிக்க.....

இனி...............

மக்களை வர்க்க ரீதியாக இல்லாமல் பெண்கள், தலித்துகள் என்று தனித்தனியாக பிரச்சினையை அணுகுவது வர்க்க சமூகத்தை அம்பலபடுத்த மட்டுமே அதற்க்கான தீர்வை பற்றி அல்ல என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு ஆக்ஸ்ஃபாம்  அறிக்கையின்படி, உலக அளவில் பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் முதல் 2153 பில்லினியர்களிடம் (100 கோடி டாலர் மற்றும் அதற்கும் அதிகமான சொத்துடையவர்கள்) இருக்கும் சொத்து மதிப்பு, உலகில் இருக்கும் ஏழ்மையான 60% மக்கள் தொகையினரிடம் – அதாவது சுமார் 460 கோடி பேரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவின் நிலைமைகளைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அனைத்து பில்லினியர்களின் சொத்துக்களின் மதிப்பைக் கூட்டினால், அத்தொகை இந்திய அரசு போடும் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகமானது.

அதே போல இந்தியாவின் சொத்துமதிப்பு வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 1% பணக்கார இந்தியர்களிடம் இருக்கும் சொத்து, இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 70% மக்களின் சொத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதாவது சராசரியாக 80 கோடி மக்களின் சொத்துக்களுக்கு நிகரான சொத்தை விட 4 மடங்கு அதிகமான சொத்தை 1.2 கோடி பேர் வைத்துள்ளனர். இந்த மிகப்பெரும் இடைவெளி, இந்தியாவில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும், அடித்தட்டு மக்கள் சுரண்டப்படும் அளவையும் பகிரங்கமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இந்திய பில்லினியர்களில் முதல் 63 பேரின் மொத்த சொத்து மதிப்பானது, மத்திய அரசின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகையாகிய ரூ. 24,42,200 கோடியை விட அதிகம்.

இத்தகைய புள்ளிவிவரங்களோடு, நாளுக்குநாள் பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறித்தும் பேசுகிறது அந்த அறிக்கை.

ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு வருடச் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் தொழிலாளர் சம்பாதிக்க 22,277 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.

ஒரு நொடிக்கு ரூ. 106 என்ற வகையில் சம்பாதிக்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்ணின் ஓராண்டு வருமானத்தை வெறும் பத்தே நிமிடத்தில் பெற்றுவிடுகிறார். இந்த ஏற்றத்தாழ்வு  மிகப் பெருமளவில் விரிவடைந்துள்ளது.

இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

இந்தியாவில் ஊதியமளிக்கப்படாமல் குடும்பப் பெண்களின் கடமையாக சுமத்தப்படும் வீட்டுவேலை மற்றும் பணிவிடை வேலைகளைச் செய்துவரும் பெண்களும் பெண் குழந்தைகளும், ஒவ்வொரு நாளும் மொத்தமாக 3.26 பில்லியன் மணி நேரங்கள் (326 கோடி மணிநேரங்கள்) இலவச உழைப்பை சமூகத்துக்குச் செலுத்தி வருகின்றனர்.

பெண்கள் செய்துவரும் இந்த இலவசப் பணிக்கு முறையான ஊதியமளிக்கப்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ. 19 லட்சம் கோடி அளவிற்குப் பங்களிக்கும். இது 2019-ம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்தமாக கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைவர், அமிதாப் பெஹர் கூறுகையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இந்தப் பெரும் இடைவெளியை, சமனற்ற தன்மையை ஒழிக்கவல்ல கொள்கைகள் இன்றி சாத்தியமில்லை என்கிறார்.

அமிதாப் பெஹர் கூறுவது போல அப்படி ஒரு கொள்கையை தற்போது இருக்கும் எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் முன்வைக்கப் போவதில்லை. நிலவும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பில், அப்படி ஒரு திட்டத்தை முன் வைக்க சாத்தியமே இல்லை.

அமிதாப் பெஹர் இது இந்திய நிலைமைகள் குறித்து மேலும் பேசுகையில், “தற்போதைய பொருளாதார அமைப்பில் பெண்கள்தான் மிகவும் குறைவான அளவிற்கு நலன்களைப் பெறுபவர்கள்; அவர்கள் பில்லியன்கணக்கான மணிநேரங்களை சமைத்தல், துவைத்தல், குழந்தைகளையும் முதியோர்களையும் பராமரித்தல் ஆகிய பணிகளில் செலவிடுகின்றனர். இவர்களது இந்த ஊதியமற்ற உழைப்புதான் நமது பொருளாதாரத்தையும், தொழில் மற்றும் சமூகத்தையும் முன்நகர்த்திச் செல்லும் மறைமுக இயங்குகலன்களாக இருக்கின்றன.” என்றார்.

இந்த அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்பலப்படும் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வையும், சுரண்டலையும் கண்டு வெறும் வியப்போடும், குழப்பத்தோடும் கடந்து செல்கிறோம்.

பணம் என்பது வெறுமனே அச்சிடப்படும் ஒரு பொருள் அல்ல. அது சமூகத்திற்கான உற்பத்தியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் உழைப்பும் உருவாக்கும் செல்வத்திற்கான ஒரு மாற்றீடு. ஓரிடத்தில் பணம் குவிகிறது என்றால், அது மற்றொரு இடத்தில் இருந்து சுரண்டப்படுகிறது என்றுதானே பொருள். 12 மணிநேரத்திலிருந்து 15 மணிநேரம் வரை சராசரியாக உழைக்கும் நம்மை விடக் குறைவாக உழைக்கும் வெகுசிலரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி ?

உருவாக்கப்படும் வளங்கள் எல்லாம், பெரும்பான்மை மக்களின் உழைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவையே. அவர்கள் தங்களின் உழைப்பிற்குக் கொடுக்கப்படும் சொற்பக் கூலியைப் பெற்று, உழைப்பின் வியர்வை காய்வதற்குள் அதனை ஜி.எஸ்.டி.யாகவும், பெட்ரோல் விலை உயர்வாகவும், பேருந்து கட்டண உயர்வாகவும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் வசம் வரிச்சலுகைகளாக, மானியங்களாக ஒப்படைக்கிறது இந்த அரசு.

இது ஒரு புறமிருக்க., குறைந்தபட்ச கூலி, வேலை நிரந்தரம் போன்ற அடிப்படை உரிமைகளை உழைக்கும் மக்களிடமிருந்து சட்டங்கள் போட்டு பிடுங்கி வருகிறது மோடி அரசு. விவசாயிகளைப் பொருத்த வரையில், விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்காமல், கொள்முதலை முறைப்படுத்தாமல் அவர்களது கோமணத்தையும் உருவிவிடுகிறது அரசு.

இப்படி நம்மிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் திருடப்படும் இந்த வளங்கள் அனைத்தும்தான் இந்தப் பெருமுதலாளிகளின் சொத்துமதிப்புகளாக உயர்ந்து நிற்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் சொத்துக்களை பறிக்கும் வேலையைத்தான் முதலாளிகள் செய்கிறார்கள். இதனை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொல்லியிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, முதலாளித்துவத்த்தை சீரமைத்து பாதுகாக்க  நினைக்கும், ஆக்ஸ்ஃபாம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே. (மூலம் வினவு சுருக்கம் மாற்றம் என்னுடையவை).

மேலும் த வயர் கட்டுரையின் தமிழாக்கம்

உலகம் முழுமைக்குமே அதிக செல்வம் உள்ளவர்களிடம் அதிகப்படியான செல்வம் சேர்வதும், பரம ஏழைகளும் மேலும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவது பொதுவான ‘டிரெண்டாக’ உள்ளது என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.  கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 3.8 பில்லியன் மக்கள், அதாவது வறுமையின் பிடியில் இருந்த மக்கள் தொகையில் பாதிபேர் 11% கீழ் நிலைக்குச் சென்றனர். அதே சமயம், 2017-2018 காலக்கட்டத்தில் இரண்டு நாட்களில் ஒரு புதிய பில்லினியர் உருவாகிக்கொண்டிருந்தார்.  2018-ம் ஆண்டு 26 செல்வந்தர்கள் உலகின் சரிபாதி 308  பில்லியன் ஏழைகளின் ஒட்டுமொத்த செல்வத்துக்கு ஈடான செல்வ வளத்தை பெற்றுள்ளனர்.

இந்தியாவில், 1% உள்ள செல்வந்தர்களின் செல்வ வளம் 39% அதிகரித்துள்ளது. ஆனால், மக்கள் தொகையில் சரிபாதியானவர்,  50% பேர் 3% வளர்ச்சியை மட்டுமே அடைந்திருக்கின்றனர்.  கடந்த ஆண்டு மட்டும் 18 புதிய பில்லியனர்கள் இந்தியாவில் உருவாகியிருக்கிறார்.  ஒட்டுமொத்தமாக உள்ள 119 பில்லியனர்கள் மட்டும், இந்தியாவின் 2018-19 பட்ஜெட் தொகையான ரூ. 24,42,200 கோடிக்கும் அதிகமான செல்வத்தை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த வருமானம், மத்திய, மாநில அரசுகள் பொது சுகாதாரம், துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றுக்கு செய்யும் மூலதன செலவைவிட அதிகம் என்கிறது இந்த அறிக்கை.

சமத்துவமின்மை பாலின ஒடுக்குமுறையானதும்கூட!

இந்த அறிக்கையில் பெண்களின் பணி குறித்து சிறப்பு கவனத்தை செலுத்தியிருக்கிறது. பெண்கள்  எப்படி ஏழ்மையிலும் ஏழ்மையாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என அறிக்கை விவாதிக்கிறது. சமத்துவமின்மை பாலின ஒடுக்குமுறையானதுகூட என அந்தப் பகுதிக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. உலக அளவில்  23% குறைவான பணம் ஈட்டும் பெண்களைக் காட்டிலும் மொத்த செல்வ வளத்தில் 50% அதிகமானதை ஆண்கள் பெற்றிருக்கிறார்கள் என்கிற ஐ.நா.வின் பெண்கள் அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது ஆக்ஸ்ஃபாம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஒரே விதமான பணிக்கு பெண்கள் இப்போதும் ஆண்களைவிட 34% குறைவான சம்பளத்தையே பெறுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.  பெண்களின் ஏற்றுக்கொள்ளப்படாத, சம்பளம் தரப்படாத பராமரிப்பு பணிகளை உலக அளவில் கணக்கிட்டால் , ஆப்பிள் நிறுவனத்தின் 10 ட்ரில்லியன் டாலர் ஆண்டு வருமானத்தைவிட 43 மடங்கு அதிகமாக வருகிறது என அறிக்கை சொல்கிறது.

செல்வந்தர்களில் செல்வந்தர்களுக்கான வரி சலுகைகள்!

செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் கடந்த பத்தாண்டுகளைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளது என்பதை அறிக்கை சொல்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான வரி தவிர்ப்பும் வரி ஏய்ப்பும் செல்வந்தர்கள் மிகக் குறைந்த  அளவிலான வரி செலுத்த காரணமாகிறது எனவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டுகிறது.

“அவமதிப்பிற்குரிய புதிய தாராளவாத கொள்கையைக் கடந்து, அறத்தின் அடிப்படையில் இதை நியாயப்படுத்தவே முடியாது.” என கடினமான வார்த்தைகளிலும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு குறித்து கருத்து சொல்கிறது. செல்வந்தர்களில் செல்வந்தர்கள் 7.6 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான பணத்தை வரி ஏய்ப்பை செய்வதாகவும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய பணத்தை வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களில் பெயர்களில் மறைத்து வைப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் சமத்துவமின்மை வர்க்கம்சாதிபாலின அடிப்படையிலானது!

இந்தியாவில் சமத்துவமின்மை வர்க்க அடிப்படையிலானது மட்டுமல்ல, சாதி ரீதியிலானது, பாலின அடிப்படையிலானது என்கிறது ஆக்ஸ்ஃபோம். “ஒரு தலித் பெண்ணின் வாழ்நாள், உயர்சாதி பெண்ணின் வாழ்நாளைவிட 14.6 ஆண்டுகள் குறைவு” என சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளத்தையும் காவு வாங்குவதை அழுத்தமாகச் சொல்கிறது (இங்கே வர்க்க அடிப்படையில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது சாதியில் உயர்வில் உள்ள கூலித் தொழிலாளியும் சாதியால் தலித்தாக உள்ள ஒரு அதிகாரியும் ஒன்றாக முடியாது இங்கே வர்க்கம் பார்பதுதான் சரி என்பேன்).

பொது சேவையை தனியார்மயமாக்குதலும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதும் பாலின சமத்துவமின்மையை ஏற்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன.  ஊதியமில்லா பராமரிப்புப் பணிகள், பெண்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கான நிதிஒதுக்கீட்டில் சமத்துவமின்மையும் ஊழலும் இந்தியாவின் செல்வ வளத்தில் சமத்துமின்மை அதிகரிக்கக் காரணம் என்கிறது அறிக்கை.

ஊதியமில்லா பணிகளுக்கு ஒரு நாளில் ஆண்கள் வெறும் 30 நிமிடங்களே செலவழிக்கிறார்கள் என்றும் பெண்கள் 3 மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் இதுவே பெண்கள் பணியில் சேர்ந்து மதிப்பான சம்பளம் வாங்குவதற்கு தடையாக இருப்பதாகவும் முக்கியமான காரணத்தை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “ஊதியமில்லா சேவை, பொருளாதாரத்தின் பெரும்பகுதியாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானியம். இது துல்லியமான பொருளாதார ஆய்வில் கண்டுகொள்ளப்படுவதில்லை.” என்கிறது ஆக்ஸ்ஃபாம்.

பொய் பிம்பங்களின் மறுபுறம்!

இந்தியாவின் கிராமப்புற மருத்துவ சேவை மிக மோசமான நிலையில் இருப்பதை அறிக்கை சொல்கிறது. ஆயிரம் பேருக்கு 0.7 மருத்துவர்களே உள்ளனர். இங்கிலாந்தில் ஆயிரம் பேருக்கு 2.8 மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் தோல்வியடைந்தவை.  மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் இதில் அடங்கும். அதோடு இந்த அறிக்கை மிக மோசமான மருத்துவ மோசடியையும் அம்பலப்படுத்துகிறது.  ‘உலகத்தரத்திலான மருத்துவம் குறைந்த விலையில்’ என அரசு விளம்பரப்படுத்தப்படும் மருத்துவ சுற்றுலாவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் தன் சொந்த மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதில் மொத்தமுள்ள 195 நாடுகளில் 145-வது இடத்தில் இருக்கிறது இந்தியா!

அதுபோல, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையே கெடுபிடியாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, குறிப்பாக மாணவிகள் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டுகிறது. அரசின் கண்டுகொள்ளாத்தனமே இதற்கு காரணம் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

அரசுக்கான பரிந்துரைகள்

பல்வேறு பிரிவுகளில் நிலவும் சமத்துவமின்மையை சுட்டிக் காட்டியிருக்கிற ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள 1% செல்வந்தர்களிடம் 0.5 % வரி பிடித்தம் செய்தால், அரசு பொது சுகாதாரத்துக்காக செலவிடும் தொகையில் 50% எளிதாக அதிகரிக்க முடியும்.

பொதுசுகாதாரத்தின் தரத்தை அதிகப்படுத்துதல், கல்வி உரிமையை கட்டாயமாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தில் வணிகமயமாக்கலை கைவிடுதல், பாலின அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை பலப்படுத்தவும் பரிந்துரைக்கிறது ஆக்ஸ்ஃபாம்.

“சாதி, வர்க்கம், பாலின அடிப்படையிலான பொருளாதார சமத்துவமின்மையை சீர்செய்ய போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தேவை. அரசு மிகப் பெரும் செல்வந்தர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் வரி பிடித்தம் செய்து உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அந்த வரிப்பணத்தில் பொது சுகாதாரத்தையும் கல்வியை பலப்படுத்த வேண்டும். ஒரு சிலருக்காக மட்டுமல்ல, அரசு அனைவருக்கும் சிறப்பான எதிர்க்காலத்தை கட்டமைத்து தரவேண்டும் ”  என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் செயல் அதிகாரி அமிதாப் பெஹர்.

அறிக்கை என்னவோ, சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால், சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.  நான்கரை ஆண்டுகால மோடி அரசு கார்ப்பரேட்டுகள், அம்பானி, அதானிகளுக்காகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசியல் அறிவில்லாதவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்துத்துவ மனுவின் வாரிசுகள் பெண்களை படிதாண்டக்கூடாது என்பதையே வெவ்வேறு விதங்களில் வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களால் எப்படி உழைப்புச் சுரண்டலிலிருந்து பெண்களை மீட்க முடியும்? ஜனநாயகத்தின் படியேதான் இந்த பாசிச ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் எனும்போது, இந்த ஜனநாயக அமைப்பு சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுமா?

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
செய்தி ஆதாரம்:  த வயர் 

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...