இன்று கம்யூனிஸ்டுகள் ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை கண்டுள்ளது -விவாதம்

 ஓர் உறையாடல் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க்கலாம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்று ஒரு சில தோழர்கள் இடையில் ஏற்பட்ட விவாதம்.
தோழர் 1. இன்று கம்யூனிஸ்டுகள் ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை கண்டுள்ளது.
தோழர் 2. எனது அனுபவத்தில் அன்றைய பிரிட்டிஷ் காலகட்டம் ஆகட்டும்; அதன்பிறகு தெலுங்கானா போராட்டம் ஆகட்டும் நக்சல்பாரி காலகட்டம் ஆகட்டும்; ஏன் 70 க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பல போராட்ட வடிவங்கள் ஆகட்டும் மிகச்சரியாகவே பாட்டாளிவர்க்க நிலையில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க திறமையுடன் செயல்பட்டார்கள் என்பேன்.
தோழர் 1. மேம்போக்காக சொல்லுவது பயனில்லை தோழர் விளக்கமாக சொல்லுங்கள்.
தோழர் 2. அன்றைய பிரிட்டிஷ்காரர் எதிர்ப்பு போராட்டத்தில் மத, சாதிய, இன, மொழி வேறுபாடின்றி ஒன்றுபட்டு பிரிட்டிஷாரை விரட்டி அடிப்பதில் போராடினர். அதே காலகட்டத்தில் குறிப்பாக தமிழக தஞ்சை பகுதிகளில் சீனிவாசராவ் கூலி விவசாயிகளை வர்க்க ரீதியாக ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி கூலிவிவசாயிகளை வர்க்கமாக அணி திரட்டினார். (அவர் சார்ந்து நின்ற கட்சியானது இதனை கைவிட்டதன் விளைவே அதன் பிறகு தஞ்சை பகுதியில் விவசாயிகள் மத்தியில் தனிமைப்பட்டு போயினர் மற்றும் பல போக்குகள் உருவாகின) . தெலுங்கானா போராட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் அங்கே உழைக்கும் விவசாயிகளுக்கான போராட்டமாக தான் இருந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அன்றைய கட்டத்தில் நிலத்துக்கான போராட்டமாக இருந்தது. (அங்கேயும் அந்தப் போரட்டத்தை முன்னெடுத்த கட்சி அதனை கைவிட்டதன் விளைவாக பின்னர் பல்வேறு விதமான போக்குகள் உருவாகின ). 70 காலகட்டத்தில் நடந்த நக்சல்பாரி போராட்டத்தில் மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கணக்கில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டது அங்கே ஜாதியோ மதமோ மொழியோ அடிப்படையாக கொள்ளப்படவில்லை.
தோழர் 1. அப்படி என்னும் பொழுது இன்றைய கோரிக்கைகள் "பட்டியல் இன மக்களை" கம்யூனிஸ்ட்டுகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றசாட்டுக்கு பதில் என்ன?
தமிழகத்தில் கூட்டகுழு போராட்ட வடிவத்தில் பாலனும், சீராளனும் நடத்திய உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கான போராட்டம் இன்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ஏன்? அவர்கள் உண்மையான மக்களின் விடுதலைக்காக போரிட்டனர். 1976 ல் தோழர் சீராளன் அவர்கள் வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வந்தார். அவர் கூலிப்பிரச்சினை நிலஉடைமையாளர் ரவுடிகள் கட்ட பஞ்சாத்து ஆதிக்கத்துக்கு எதிராக தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் நிலஉடைமையாளர் அடியாட்களுடன் மோதல் மக்களோடு மக்களாக பல போராட்டங்களை கண்டார்.
பொன்னேரி பகுதியில் இருவேறு ஜாதிகள் இடையில் உள்ள மக்களை ஒன்றிணைத்து பட்டியலின மக்கள் வீடுகளில் உணவு வருந்தவும் அவர்களுடன் ஒன்றுபட்டு போராடுவதும் அவர் நடைமுறை ஆக்கினார். நில உடையாளர்கள் ஆதிக்கமும் போலீஸின் அடாவடியும் அங்கே ஒடுக்கப்பட்டது இதை கண்ட இந்திய ஆளும் வர்க்கம் சீராளனை 1976 ல் கொன்றது. பின்னர் மக்களை பிதிகுள்ளக்கியது என்பதை விட அன்று பிரிட்டிஷ் செய்த அதே சூழ்ச்சியை இந்திய ஆளும் வர்க்கம் கையில் எடுத்தது ஒன்றாக வர்க்கமாக ஒன்றிணைந்த மக்களை ஜாதியாக பிரித்தது அவை 1990 களில் நடைமுறையாகியது இன்று ஜாதிய பிரச்சினையை பேசும் பலரும் இந்த வரலாற்று நிகழ்வுகளை எவ்வளவு உள்வாங்கி யுள்ளனர் தெரியாது?
தோழர் 1. ஆக இன்றைய நிலைக்கு காரணம் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையா?
தோழர் 2- ஆம், இன்று வர்க்க ஒற்றுமையை மறுக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உகந்த சித்தாந்தகளால் மக்கள் சிந்தனை சிதைந்து அவர்கள் பின் செல்வதும், உலக கம்யூனிச இயக்க பின்னடைவும் கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை இன்மையும் இன்னும் பல...
தோழர்கள் கருத்து கூறலாம் நேற்றைய கருத்து கேட்ப்பில் இருந்து.

ஒரு தோழருடன் விவாதித்த பொழுது அவர் வைத்த கேள்வியே இது,"பட்டியலின மக்களுக்கு இறந்தபின் சுடுகாட்டுக்கு போவதற்கு வழி இல்லை இதற்குத் தீர்வு என்ன?".
இந்த அரசு அமைப்பானது எல்லா மக்களும் வாழ வழிசெய்யும் சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. ஆகவே எல்லா மக்களுக்குமான அரசு என்றால், எல்லா மக்களுக்கும் உண்மையாலுமே அவர்களின் அடிப்படை உரிமைக்கு துணை நிற்க வேண்டிய கடமை பட்டதே.
ஆக சட்டவாதம் பேசும் பொழுது, அந்த சட்டம் வர்க்கம் சார்ந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் பிரச்சினையை பேசும் பொழுது புறசூழலையும் அணுக வேண்டும். அதனை புரிந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். அந்த சட்ட நடைமுறைகளை சிக்கலாக்குவதேன் எல்லா மக்களுக்கும் அவை உதவில்லை ஏன் என்பதனை புரிந்துக் கொள்ள சில 50 ஆண்டுகளுக்கு முன்னர் சில நிகழ்வுகளை உங்களுக்கு புரியவைக்க நினைக்கிறேன்..
உண்மையாலுமே ஒரு பொதுவுடமை வாதியாக இருப்பவன் இந்த பிரச்சனைக்கு மக்களை அணுகி அவர்கள் மத்தியில் பேசி இதற்கு தீர்வு காண முடியும் அவைதான் நமது கடந்த கால வரலாறு ..
வர்க்கமாக இருந்த மக்களை அன்று ஒன்று திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று இல்லை. அதாவது தஞ்சை பகுதிகள் ஆகட்டும் தர்மபுரி ஆற்காடு பகுதிகளாகட்டோம். உழைக்கும் கூலிகளை, ஏழை, எளிய மக்களை ஒன்றுபடுத்தி போராடிய அந்த போராட்டக்காரர்கள் அங்கே சாதிகளாயிருந்த உழைப்பாளிகளை வர்க்கங்களாக திரட்டிப் போராடினார்கள், அவர்களின் போராட்டம் பிற்போக்கான நிலடைமை ஒடுக்குமுறைக்கும் ஜாதிய ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிர்த்து தீர்மானகரமாக பங்காற்றினர். அன்று இங்கே ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை ஏனெனில் அன்று மக்கள் மத்தில் பொதுவுடைமை இயக்கம் செயல்பட்டது.
அதையைதான் அவர்கள் செய்வதால் அச்சம் கொண்ட அரசு சாதி சங்கங்களை களத்தில் இறக்கி அவர்களை அப்புறப்படுத்திவிட்டு....
இன்று அவர்களை தேடினால் என்ன செய்ய???
இன்று ஜாதிக்குள்ளே வர்க்கங்கள் வளர்ந்து விட்டபின் . வர்க்கப் போராட்டமானது திசை மாறிப் போய்விட்டது. ஓரே ஜாதிக்குள்ளே உடைமை வர்க்கமும் உடைமை அற்ற வர்க்கமும் உள்ள போது. இவை வர்க்க போராட்டமா ஜாதி போராட்டமா?
உடைமை வர்க்கம் தன்னை மேனிலை படுத்திக் கொள்ள உடைமை அற்ற ஏழை எளிய மக்களையும் தன் பின்னால் அணி திரட்டி ஜாதிய சங்கமாக திகழ்கிறது.
உடைமை அற்ற மக்களுக்காக போராட வேண்டியவர்கள் வர்கங்களாக திரள வேண்டியது மார்க்சிய பொதுவுடைமை சித்தந்தம், ஜாதியாக திரளச் சொல்வது உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்க ஒடுக்கும் வர்க்க சித்தந்தமே.
ஜாதி போராட்டங்களை புரிந்து வினையாற்ற வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலவீனமே இதற்கு காரணம் என்று சாதாரணமாகச் கூறிக்கொள்ளலாம்.
இருந்தும் உழைக்கும் வர்க்கம் ஒற்றுமையின்றி எதிரிகளின் சூழச்சியால் வீழ்த்தப் பட்டுள்ளது என்பதனை மட்டும் பதிவு செய்ய நினைக்கிறேன் இன்னேரத்தில்.
சில நாட்களுக்கு முன் ஒரு தோழரை காண சென்றபோது அவர் இரு கேள்விகளை கேட்டார் .
முதல் கேள்வி:- "நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஒரு பட்டியல் இனத்தவரான ராம்நாத் கோவிந்த் வந்தாலும் அவர் பூரி ஜெகநாத் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. அப்படி எனும்பொழுது ஜாதிய கொடுமை என்பது எவ்வளவு மோசமாக உள்ளது பாருங்கள்" என்றார்.
உண்மைதான் இவை புரிந்துக் கொள்ள வேண்டியவையே.
அதற்கு முன் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், "ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் சாதாரண மனிதர் அல்ல, இந்திய அரசியலமைப்பின் மேலடுக்கு பொறுப்பிலிருப்பவர்".
அதாவது இங்கு இந்தப் பதவி என்பது உடமை வர்க்கத்தை காக்கும் அரசமைப்புக்கானதுதானே இதனை அவரே ஏற்று தானே செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அரசு அமைப்பானது எல்லா பிற்போக்குத் தனங்களையும் எல்லா ஒடுக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குவதாகும். அப்படி எனும் பொழுது அவர் இந்த அரசமைப்பின் எல்லா ஒடுக்குமுறையும் ஏற்றுக் கொண்டுதானே இவர் இந்த உயர் பதவிக்கு வந்தவர். அப்படி எனும் பொழுது அவர் தனது பதவிக்காக இந்த எல்லா ஒடுக்குமுறையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு தன்னை சார்ந்தவர்களையும் சகித்து வாழ சொல்வதுதான் இதில் எளிமையான கோட்பாடாகும்.
மேலும் அர்ப்ப சம்பளம் வாங்கும் ஒரு பூஜரிக்கு இவ்வளவு தைரியம் வரும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே என்பேன். இவரிடமுள்ள அதிகார பலமும் இவரிடம் உள்ள பல்வேறு விதமான சட்டதிட்டங்களும் பயன்படாமல் போவது ஏன் இதுதான் சிந்திக்க வேண்டியது உள்ளது.
ஆம் இந்த சமூகத்தில் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் அரசமைப்பு என்பது அதில் மத அமைப்பான மத நிறுவனங்களை தூக்கி நிறுத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக கூறும் கோயில்கள் அந்த மதக் கோட்பாடுகளை கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது தான் இவர்களின் நியாயம் தர்மம் என்று பேசப்படுகிறது.
ஆக இந்த சமூக அமைப்பான உடைமை வர்க்கம் சமுகத்தை தூக்கி நிறுத்தும் இவர்கள் செயலானது இதைத் தீர்ப்பதற்கு எந்த வழிவகையும் அல்ல என்பதே நமது பதிலாகும்.
ஆக இந்த உடைமை சமூகத்தில் இதற்கு தீர்வு அல்ல ஆகவே உடைமை அற்ற(பொதுவுடைமை) சமூகத்தில் மட்டுமே இதற்கு தீர்வு (இதற்க்கு நீண்ட போராட்டம் நடைபெறும்) என்று கூறும் அதேவேளையில் இதற்கான பொதுவுடைமை கட்சி வலிமை பலம் இருந்தால் மட்டுமே இதற்கான சரியான வழி வகை செய்ய முடியும் என்பதுதான் உண்மையான தீர்வாகும் .
மேலும் செய்தியை தெரிந்துக் கொள்ள பத்திரிக்கை லிங்க்...
May be an image of 4 people, people standing and outdoors
Subramani Kumarasamy, Rajendren Ramakrishnan and 12 others
18 Comments
4 Shares
Like
Comment
Share
May be an image of 4 people and text that says 'இன்றைய தோழர்1. ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை தோழர் பி.சீனிவாசராவ் கண்டுள்ளது. தோழர். எனது அனுபவத்தில் அன்றைய காலகட்டம் அதன்பிறகு தெலுங்கானா போராட்டம் நினைவுதினம் ஆகட்டும் நக்சல்பாரி காலகட்டம் ஆகட்டும் க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பல போராட்ட வடிவங்கள் ஆகட்டும் மிகச்சரியாகவே பாட்டாளிவர்க்க நிலையில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க என்பேன். அன்றைய பிரிட்டிஷ்காரர் எதிர்ப்பு அன்று சாதிய இன மொழி வேறுபாடின்றி பிரிட்டிஷாரை விரட்டி போராடினர். தஞ்சை நடத்தி சார்ந்து அவர்கள் பொருளாதார ரீதியான கையில் எடுத்தார். இதனை கைவிட்டு அதன் அதன் பிறகு தஞ்சை மத்தியில் போயினர் மற்றும் பல உருவாகின) போராட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் அங்கே உழைக்கும் எனக்கூறி போராட்டமாக தான் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் அன்றைய கட்டத்தில் நிலத்துக்கான கைவிட்டதன் விளைவாக (அங்கேயும் அந்தப் போரட்டத்தை முன்னெடுத்த பின்னர் பல்வேறு விதமான போக்குகள் காலகட்டத்தில் நடந்த நக்சல்பாரி'
சு.கா.சீவா, Ayyub Khan and 1 other
1 Comment

கோ.கேசவன் ஆய்வுகளில் திராவிட இயக்கம் க.அன்பரசின் பேச்சின் மீது என் விமர்சனமும் அவரின் முழு எழுத்தும்

 கோ.கேசவன் ஆய்வுகளில் திராவிட இயக்கம்

===================================
இதனை பற்றி பேசிய விமர்சகர், விமர்சிக்க வரவில்லை கோ.கேசவனை குற்றம் சுமத்தி தனது எழுத்துகளை மேன்மை படுத்திக் கொள்ள நினைத்துள்ளார். அவர் நூலை விமர்சிப்பதை விட அவர் இதையெல்லாம் செய்யவில்லை என்று முத்திரை குத்தி ஒதுக்க முயற்சித்துள்ளார் இவை எவ்வகையில் பயனளிக்கும் என்று தெரியவில்லை!!!. அவை கீழ் வரும் அவர் பேச்சின் சாரமே விளங்கிக் கொள்ள முடியும்.
------
1917 ஆம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தினாலும், ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மூன்றாம் அகிலம் வழங்கிய கோட்பாட்டு வழிகாட்டுதல்களாலும் உந்துதல் பெற்ற இந்திய பொதுவுடைமை குழுக்கள் ஏகாதிப்பத்திய எதிர்ப்பையும், வர்க்கப் போராட்டத்தையும் உள்ளீடாக கொண்ட ‘தேசிய விடுதலைப் போராட்டத்தை’ காலனியக் காலத்திலும், சுதந்திர இந்தியாவில் ஏகாதிப்பத்திய எதிர்ப்பு மற்றும் நிலவுடைமை எதிர்ப்பை மையமாக கொண்ட புதிய சனநாயக/மக்கள் சனநாயக புரட்சியையும் தமது நிலைப்பாடாக கொண்டிருந்தன.
காலனியாதிக்கக் காலக்கட்டத்தில் இந்தியா எனும் அரசியல் நிலப்பரப்பை பிரிட்டன் ஏகாதிப்பத்திய எதிர்ப்பு எனும் வகைமைக்குள் பிரதானப்படுத்திய பொதுவுடைமை இயக்கம் பிற்போக்கு வர்க்கங்களின் அரசியல், பண்பாட்டு இலட்சியங்களுடன் உருவாகிக் கொண்டிருந்த இந்தியாவை தேசமாக தனது கரு நிலையிலேயே ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால் எதிர்நிலையில் பார்ப்பனிய-பனியா நலன்களுக்காக உருவாகி வரும் இந்திய தேசிய உருவாக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் காலனிய காலந்தொட்டு அரசியல், பண்பாட்டு மற்றும் கருத்துருவ போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.
கேசவனின் திராவிட இயக்கம் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்த இவ்விரு நூல்களும் வெளியாகிய 1990கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தக் காலமாகும். உலக அளவில் இடதுசாரிகளின் ஆதர்ச நாடுகளான சோவியத் ரஷ்யாவின் தகர்வும், சீனாவில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியும் உலக அரங்கில் அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கும், ஏகபோக நிதிமூலதன ஆதிக்கத்தின் உலகுதழுவிய வீச்சும் புதிய நிகழ்வுப் போக்குகளாயின. இந்தியாவில் நேருவியகால கலப்பு பொருளாதாரக் கொள்கைகளின் மிச்சசொச்சங்களும் தூக்கி எறியப்பட்டு இந்தியா உலக நிதி மூலதனத்திற்குத் தனது வாசலைத் திறந்துவிட்டது. அரசியல் அரங்கில் ‘இந்துத்துவம்’ இந்திய ஆளும் வர்க்கங்களின் புதிய தோழனாய் உருவெடுத்தது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் வீச்சால் அரசியல் அரங்கிலும் பண்பாட்டு அரங்கிலும் புதிய போக்குகள் உதயமாயின. அம்பேத்கர் நூற்றாண்டின் துணைவிளைவாக எழுந்த தலித் அரசியலின் எழுச்சி இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது, மேலும் தமிழ்த் தேசியம் பல்வேறு முகங்களில் தமிழக அரசியலில் தலைப்படத் தொடங்கியது. போதும் போதும் முடியவில்லை அவரின் பேச்சை எழுத அன்பரசு அவர்களின் பேச்சே...
இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்று பொருள்முதம் என்ற மார்க்சிய ஆய்வுமுறை விடுங்கள் ஆய்வுமுறை என்றால் தமது கருத்தை அவர் மீது திணிப்பதல்ல அவரின் எழுத்தில் உள்ள சாரங்களை உள்வாங்கி சரியானவற்றை ஏற்பதும் தவறானவற்றை சுட்டிக் காட்டுவதுமே ஆகும். பரவாயில்லை அவரின் நோக்கம் என்னவோ கோ.கேசவனை தாக்கி பேசி ஓய்ந்து உட்கார்ந்த பொழுது அன்பரசு அவர்களின் பேச்சு என்னவென்று சிந்திக்க தொடங்கினேன்....
விடுங்கள் இவை விமர்சிபவர்களின் சுதந்திரம்... நன்றி எதற்க்காக இவர்களை விமர்சிக்க???
May be an image of 8 people, people standing and text that says 'மார்க்சிய விமர்சகர் முனைவர் கோ. கேசவன் நூல்கள் மீதான திற ராய் க் த்ரந ரந கிறனாய்வுக் கருத்தரங்கம்'


தமிழில் மார்க்சிய விமரிசன மரபை வளப்படுத்தியவர்களுள், நா.வானமாமாலை, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் கோ.கேசவன். இவர்களுக்குள் உள்ள ஒரு பொதுத்தன்மை தமிழிலக்கியப் விமரிசன பரப்பில் மார்க்க்சிய அணுகுமுறையைக் கைக்கொண்டவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் என்பதாகும். கோ.கேசவன் மார்க்சிய இலக்கிய விமரிசன முறையோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொண்டவர் அல்ல. அரசியல் நடவடிக்கையின் பகுதியாக மார்க்சியத்தை அணுகியவர். இந்திய பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிகத்தீவிரமாக புரட்சிகர கருத்துக்களை முன்வைத்த மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் அறிவுலக முகமாய் இருந்தவர்.

 

கோ.கேசவனின் வாழ்வு பற்றியச் செய்திகளைப் பார்க்கும் போது இன்றையத் தமிழகத்தின் அரசியல் செல்திசையைத் தீர்மானித்த 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கல்லூரி மாணவராக கேசவன் இருந்திருக்கிறார். இந்தி எதிர்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் எழுச்சிமிக்க நடவடிக்கைகளுள் ஒன்று, அதே தசாப்தத்தில் எழுந்த வங்க நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூன்றாவது பெரும் பிளவாக உருவான மார்க்சிய  லெனினிய இயக்கத்தின் எழுச்சியையையும், அதன் துணை விளைவாக நாடு முழுவதும் உருவான வீரஞ்செறிந்த உழவர் எழுச்சிகளையும், நக்சல்பாரி இயக்கத்தினுடைய இளைஞர்களின் அர்பணிப்பையும் தியாகத்தையும் அவர் நேரடி சாட்சியமாய் பார்த்திருக்க கூடும். அதற்கு அடுத்த 1970 களில் இந்தியாவில் நிலவிய அவசர நிலை நெருக்கடி இந்திய பாராளுமன்ற சனநாயகத்தின் மீதான மார்க்சிய லெனினிய இயக்கத்தின் விமரிசனங்களை வலுப்படுத்துவனவாய் அமைந்தன.

 

 இந்தி எதிர்ப்பு போராட்டமும், நக்சல்பாரி உழவர் எழுச்சியும்  விடுதலையடைந்த இந்தியாவின் புரட்சிகரமான போக்கினை வெளிப்படுத்துவனவாய் இருந்தன.

இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏக இந்திய வெறிக்கு எதிரான தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பிரகடனமாகவும், நக்சல்பாரி உழவர் எழுச்சி இந்திய நிலக்கிழமை உற்பத்தி முறைக்கு எதிரான விடுதலைப் பிரகடனமாகவும் கருத இடம் தருபவை. இவ்விரு அரசியல் எழுச்சிகளுக்கும் உலக, இந்திய அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும், காலனிய கால இந்திய அரசியல் உருவாக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியும் உண்டு,

 

 திராவிட இயக்கம் காலனிய காலத்தின் உப விளைவாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தஇந்திய தேசிய கருத்தியலுக்கு எதிரான தேசிய கருத்தியலையும் அரசியல் பண்பாட்டு நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்தி வந்தது.

1917 ஆம் ஆண்டு  நிகழ்ந்த ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தினாலும், ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மூன்றாம் அகிலம் வழங்கிய கோட்பாட்டு வழிகாட்டுதல்களாலும் உந்துதல் பெற்ற இந்திய பொதுவுடைமை குழுக்கள் ஏகாதிப்பத்திய எதிர்ப்பையும், வர்க்கப் போராட்டத்தையும் உள்ளீடாக கொண்ட தேசிய விடுதலைப் போராட்டத்தைகாலனியக் காலத்திலும், சுதந்திர இந்தியாவில் ஏகாதிப்பத்திய எதிர்ப்பு மற்றும் நிலவுடைமை எதிர்ப்பை மையமாக கொண்ட புதிய சனநாயக/மக்கள் சனநாயக புரட்சியையும் தமது நிலைப்பாடாக கொண்டிருந்தன.

 

காலனியாதிக்கக் காலக்கட்டத்தில் இந்தியா எனும் அரசியல் நிலப்பரப்பை பிரிட்டன் ஏகாதிப்பத்திய எதிர்ப்பு எனும் வகைமைக்குள் பிரதானப்படுத்திய பொதுவுடைமை இயக்கம் பிற்போக்கு வர்க்கங்களின் அரசியல், பண்பாட்டு இலட்சியங்களுடன் உருவாகிக் கொண்டிருந்த இந்தியாவை தேசமாக தனது கரு நிலையிலேயே ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால் எதிர்நிலையில் பார்ப்பனிய-பனியா நலன்களுக்காக உருவாகி வரும் இந்திய தேசிய உருவாக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் காலனிய காலந்தொட்டு அரசியல், பண்பாட்டு மற்றும் கருத்துருவ போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.

 

   அதன் அரசியல் செயல்பாடுகளைக் காலனிய காலத்தில் ஏகாதிப்பத்திய ஆதரவு சக்தியாகவும், விடுதலை அடைந்த இந்தியாவில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பகுதியாகவும் பொதுவுடைமை இயக்கம் அடையாளம் கண்டது. இவ்விரு போக்குகளில் திராவிட இயக்கம் சமூகத்தின் பொருளாதார வர்க்க அடிப்படையை கைவிட்டதென்றால் இரண்டாவது போக்கு வர்க்கப் போராட்டத்தின் களத்தை பொருளாதார அடித்தளத்தில் மட்டுமே தேடி சமூகத்தின் அரசியல் பண்பாட்டுத் தளங்களில் தீவிரமாக வினையாற்றிய நட்பு ஆற்றல்களை எதிர் நிலையில் நிறுத்தியது. இவ்விரு போக்குகளில் இரண்டாவது போக்கினராகவே கோ.கேசவன் உள்ளார்.

 

இம்மதிப்பீட்டின் அடிப்படையில் கேசவன் திராவிட இயக்கம் தொடர்பாக எழுதிய சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்’ (1990), ’திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்’(1991) எனும் இரு நூல்களையும் நாம் அணுகலாம்.

 

கேசவனின் திராவிட இயக்கம் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்த இவ்விரு நூல்களும் வெளியாகிய 1990கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தக் காலமாகும். உலக அளவில் இடதுசாரிகளின் ஆதர்ச நாடுகளான சோவியத் ரஷ்யாவின் தகர்வும், சீனாவில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியும் உலக அரங்கில் அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கும், ஏகபோக நிதிமூலதன ஆதிக்கத்தின் உலகுதழுவிய வீச்சும் புதிய நிகழ்வுப் போக்குகளாயின. இந்தியாவில் நேருவியகால கலப்பு பொருளாதாரக் கொள்கைகளின் மிச்சசொச்சங்களும் தூக்கி எறியப்பட்டு இந்தியா உலக நிதி மூலதனத்திற்குத் தனது வாசலைத் திறந்துவிட்டது. அரசியல் அரங்கில்  இந்துத்துவம்இந்திய ஆளும் வர்க்கங்களின் புதிய தோழனாய் உருவெடுத்தது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் வீச்சால் அரசியல் அரங்கிலும் பண்பாட்டு அரங்கிலும் புதிய போக்குகள் உதயமாயின. அம்பேத்கர் நூற்றாண்டின் துணைவிளைவாக எழுந்த தலித் அரசியலின் எழுச்சி இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது, மேலும் தமிழ்த் தேசியம் பல்வேறு முகங்களில் தமிழக அரசியலில் தலைப்படத் தொடங்கியது.

நாம் குறிப்பிட்டுள்ள கேசவனின் நூல்கள் 1990 களின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை எனினும் இக்காலத்தின் பொதுப்போக்கோடு தன்னை இணைத்துக் கொண்டிருப்பவைதான். மிகத் தீவிரமான அரசியல் சமூக மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்த காலப்பகுதியில் திராவிட இயக்கத்தை கேசவன் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதற்கானத் தேவையை அவர் நூல்களில் விரிவாக விளக்கியிருப்பதாக தெரியவில்லை. திராவிட இயக்கத்தின் தொடக்ககால இயக்கங்களுள் ஒன்றான சுயமரியாதை இயக்கத்திற்கும் பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் இடையிலான உறவை சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்எனும் நூலில் ஆராயப் புகுந்த கேசவன், சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் தலைவரான பெரியாரின் வர்க்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

 

பெரியாரின் வர்க்க கண்ணோட்டம் என்பது ஆளும் வர்க்க கண்ணோட்டம் என்பதன் காரணமாகவே 1930களில் சுயமரியாதை இயக்கத்தின் பொதுவுடைமை இயக்க செயல்பாடுகள் நீர்த்துப் போகின என்பதுதான் 1990களில் கேசவன் முன்வைத்த முடிவாகும். ஏகாதிப்பத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு எனும் நிலைப்பாட்டிலிருந்து பெரியாரிய இயக்கத்தினை திறனாய்வு செய்ய முயன்றுள்ள கேசவனின் பெரியார் பற்றிய மதிப்பீடுகள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளன.

ஏகாதிப்பத்திய ஆதரவாளர், தரகுமுதலாளிய ஆற்றல்களின் பிரதிநிதி, பாராளுமன்ற சந்தர்ப்பவாதி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோற்றம் கொண்ட சாதிய சங்கங்களின் நோக்கங்களுக்கும், வர்ணாசிரம எதிர்ப்பு சாதி எதிர்ப்பு நிலைப்பாடுக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்திற்கும் நோக்கங்கள் ஒன்றுதான் பாதைகள்தான் வேறு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி மேலெழுந்துவந்த தமிழ் மறுமலர்ச்சியின் விளைவாய் தோன்றிய திராவிட இயக்கத்தின் மக்களை ஈர்க்கும் பேச்சுக்கலை என்பது மக்களை ஏய்க்கும்  காரியவாதாம், பிழைப்புவாதம், வர்க்க சமரசவாதி,’பெரியாரியத்துக்கும் காந்தியத்துக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள்இல்லை, என்பன போன்றவைதான் கேசவனின் ஆய்வு முடிவுகளாகும்.

 

அடிப்படையில் இந்தியா ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதியே பெரியாரிய இயக்கம் என்பதை நிறுவுவதற்கான தரவுகளைத்தேடிய முயற்சியாகவே கேசவனின் நூலை மதிப்பிட முடியும், பல இடங்களில் சுயமரியாதை இயக்கத்தினால் நடந்த சனநாயக மாற்றங்களைத் தவிர்க்கவியலாமல் ஒப்புக்கொள்ள நேரிடும் கேசவன் சுயமுரண்பாடுகள் மிகுந்த தொகுப்புக் கருத்துக்களையே முன்வைக்கிறார். வரிக்கு வரி விளக்கம் சொல்ல முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லை, எனவே சாரமாக கேசவன் பார்க்கத் தவறிய இடங்களை நாம் சுருக்கமாகச் சுட்டிக்காட்டலாம்.

 

காலனியக் காலத்தின் துணைவிளைவாகத் தோன்றிய அரசியல் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் செல்வாக்குப் பெறுவதை மையமாகக் கொண்டே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலச் சமூக வர்க்கங்கள் தங்களுக்கான அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு நிறுவனங்களை அமைத்துக்கொண்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலவுடைமை ஆதிக்கத்தின் காரணமாகவும், சமூக அசைவியக்கத்தை தாமதப்படுத்தும் பார்ப்பனியத்தின் கருத்தியல் பண்பாட்டு நிறுவனங்களின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த இந்தியச் சமூகத்தில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்கள் பாரிய அளவிலானவை. காலனிய கல்வி முறை, காலனிய கால நிலச்சீர்த்திருத்தங்கள், அதிகார நிறுவனங்கள் ஆகியவை சமூக மாற்றத்தின் தூண்டுகோள்களாயின.

 

காலனியக் கால நலன்கள் மற்றும் மேலாதிக்கத்திற்காக பார்ப்பனிய வேதச் சார்பின் கருத்தியல் உதவியோடு உருவாக்கப்பட்ட இந்திய நிலப்பரப்பில் தன்னை ஒரு தேசமாக நிர்மாணித்திக் கொள்வதற்கான இயங்குதிசையில் வட இந்தியப் பகுதிகளில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து சமூகத்தின் பிற்போக்கு வர்க்கங்களும், பார்ப்பனியமும் பிரிட்டன் காலனியவாதிகளோடு இணைந்தும் முரண்பட்டும் தொழிற்பட்டு வந்தனர். இப்போக்கிற்கு வேதம் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியோடு ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருத்திற்கும் இடையிலான உறவைத் தேடிய ஐரோப்பியர்களின் மொழியியல் செயற்பாடுகளும், இந்தியாவில் காலனிய நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்திய பார்ப்பனிய இருமொழி அறிஞர்களின் பங்களிப்பும் காரணமாயின.

 

வட இந்தியப் பகுதிகளை அதாவது அன்றைய வங்க மற்றும் பம்பாய் மாகாணங்களோடு ஒப்பிடுகையில் தென்னிந்திய சமூகத்தின் சமூக இயக்கப்போக்கு வேறுதிசையிலிருந்தது. மாகாண அரசியலில் வங்க மற்றும் பம்பாய் மாகணாங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தின் உறவு மாறுபட்ட வகையில் அமைந்திருந்ததை காலனியக் கால தென்னிந்திய சமூகத்தை விரிவாக ஆராய்ந்துள்ள ஆய்வாளர் D.A Washbrook தனது ”THE EMERGENCE OF PROVINCIAL POLITICS - The Madras Presidency 1870—1920” எனும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

 

வங்க மற்றும் பம்பாய் மாகாணங்களுக்கிடையே இருந்த சமூக, பண்பாட்டு ஒற்றுமைகள், மற்றும் பொருளாதார ஒருங்கிணைவுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணம் அவற்றிலிருந்து மட்டுமல்ல தனது அதிகாரத்தின் கீழிருந்த பல்வேறு சமூகக் குழுக்களிடையேயும் கூடப் பொதுவான ஒற்றுமையைக் கொண்டிருக்கவில்லை. அதற்கான சமூகப் பண்பாட்டுச் சூழல்கள் தென்னிந்தியாவில் பல படித்தனவாக இருந்தன. இந்நிலையில் 1910 ஆண்டுகளின் இறுதிப்பகுதியில் சென்னை மாகாணத்தில் உருவான அரசியல் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்எனும் நீதிக்கட்சியும் பிரிட்டிஸ் அரசாங்கத்தை எதிர்ப்பதாக தோன்றிய ஹோம்ரூல் இயக்கத்தின் தாக்கமும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும்.

 

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குறிப்பாக 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிருந்து பல்வேறு சாதிய அமைப்புகள் சென்னை மாகாணப்பகுதியில் தோற்றங் கொள்ளலாயின. தங்களது சமூக உயர்விற்கான பிரஞ்ஞையை உள்ளீடாக கொண்ட இவ்வமைப்புகள் மரபான நிலவுடைமை அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான அரசியல் நிறுவனங்களை காலனிய ஆட்சியின் நிழலியே தேடின. பிரிட்டனின் பொருளாதாரத் தேவைகள் இவற்றிற்கான வழிவகைகளை அரசியல் நிறுவனங்கள், நிலச் சீர்திருத்தங்கள், தொழிற்துறையின் நுழைப்பு ஆகியவற்றின் மூலம் வழங்கின. மேலும் 1856 ஆம் ஆண்டு வெளியான கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, தென்னிந்திய சமூகத்தை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியப்பாட்டை வழங்கும் இன, மொழியியல் கூறுகளை எடுத்துரைத்ததும், பரவலாகி வந்த அச்சு வெளியீடுகளின் வளர்ச்சியும் காலனியகால இந்தியாவில் வடக்கு பகுதியின் அரசியல் சமூக தேவைகளுக்கு மாற்றான அரசியல் சமூகத்தேவைகளை சென்னை மாகாண அரசியலில் உருவாக்கின.

 

 இந்நிலையில் தனது தோற்றத்திலேயே காலனிய இந்தியாவின் வடக்குப் பகுதி அரசியல் சமூகப் பண்பாட்டு அமைப்புகளின் தேவைகளுக்கு எதிர்திசையில் தனது தேவைகளை தென்னிந்தியப்பகுதி குறிப்பாக சென்னை மாகாண அரசியல் அமைத்துக் கொண்டது, சமூகத்தின் உயர் வர்க்கங்களினால் அவற்றின் தேவைகளை உள்ளீடாக கொண்டு தோன்றியிருப்பினும், பார்ப்பனரல்லதோர் இயக்கம் ஒரு பொது அடையாளத்தின் கீழ் தென்னிந்திய மக்களை ஒருங்கிணைப்தற்கான இயக்கமாகும், இந்துச்சமய மறுமலர்ச்சியோடு இணக்கம் கண்ட காங்கிரசு மற்றும் தேசியவாத இயக்கங்களுக்கு எதிர் திசையில் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தன்னை தோற்றுவித்துக் கொண்டது. 1910களின் இறுதியில் உருவான இரட்டையாட்சியின் பலனை பெறுவதில் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் காட்டிய ஆர்வம் அகில இந்திய அளவில் செல்வாக்குப் பெற்றுவந்த இந்திய தேசியவாதம் மற்றும் வகுப்புவாத நிகழ்ச்சிப்போக்குகளுக்கு எதிரான சனநாயக நிகழ்ச்சிப்போக்கின் தொடக்கமாகும், காலனியச் சார்புதான் எனினும் நூற்றாண்டுக்கணக்கான நிலவுடைமை ஆதிக்கத்திலிருந்து வெளியேற முற்பட்ட படித்தப் பிரிவினரின் இன்னும் சொன்னால் முதலாளிய வர்க்கத்தின் தோற்றத்தோடு பிராமணல்லாதோர் இயக்கம் தொடர்புடையது.

 

இந்நிலையில் 1925 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் இயக்கத்தினுள் பார்ப்பனரல்லாதோரின் முகமாக பயணித்துவந்த பெரியாரின் விலகலும் அதற்கு பிந்திய சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். பெரியார் பார்ப்பனரலாதோர் இயக்கத்தோடு உறவு ஏற்படுத்திக் கொண்டபோது பார்ப்பனிய-பனியா நலன்களை உள்ளடக்கிய வகுப்புவாதத்தையும் தேசிய இனங்களின் இருப்பையும் மறுத்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத இயக்கங்களுக்கு மாற்றான அரசியல் சமூக இயக்கங்கள் தங்களை பார்பனரல்லாதோர் இயக்கத்தோடு அடையாளப்படுத்திகொண்டு தொழிற்பட்டன.

 

இவ்வியக்கங்கள் வேளாளர்களின் மேலாதிக்கத்தையும் தமிழ் மொழி மற்றும் சமய அடையாளத்தையும் வெளிப்படுத்திய சைவசமய இயக்கங்கள், தென்னிந்திய நிலவுடைமை மற்றும் காலனியத்தின் சார்பிலிருந்து தோன்றிய முதலாளிய வர்க்கங்களின் நலன்களை பிரதிபலித்த நீதிகட்சி , மரபுகளின் பிடியிலிருந்து மீண்டு படிப்படியாக விலகி வர்ணாசிரம எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதை பார்ப்பனிய சமூக நடைமுறைக்கு எதிராக முன்னிறுத்திய பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1930 களின் தொடக்க ஆண்டுகளில் பொதுவுடைமை சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்டோரின் அரசியல் இயக்கங்கள் என பலதரப்பினரை உள்ளடக்கியது.

 

இவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் நடந்த கருத்தியல் அரசியல் போராட்டங்கள், பிளவுகள், இவற்றின் பொதுப் பகைபுலமாக விளங்கிய வடக்கின் இந்துப் பார்ப்பனிய-பனியா கூட்டு, காலனிய ஆட்சியின் இருப்பிற்கான உலகுதழுவிய நெருக்கடி என விரிந்த புலத்தை சுயமரியாதை இயக்கத்திற்கும் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கும் இடையிலான உறவு பற்றிய ஆய்வு வேண்டி நிற்கிறது.

 

பெரியார் இயக்கத்தைத் தனிநபர் இயக்கமாகத் தொடங்கி நீதிகட்சி, சைவ சமய இயக்கங்கள், சாதிய இயக்கங்கள் ஆகியவற்றோடு  சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்த முரண்பாடுகளை விளக்கி காணாமல் அவற்றை பெரியாரின் இயக்கத்தோடு சுருக்கி அதனை  ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக காணும் ஒரு முயற்சியாகத்தான் கேசவனின் நூல் அமைந்துள்ளது. பொருளாதார அடித்தளத்தின் பிரதிபலிப்புதான் சமூக மேற்கட்டமான நிறுவனங்களான அரசியல், பண்பாட்டு இயக்கங்கள் எனும் பொருளாதார வாத  குறுக்கல் பார்வையை சுய விமரிசனமின்று செயல்படுத்தி பார்க்க விளைந்ததன் விளைவாக கேசவன் அடிப்படையில் பெரியாரின் இயக்கம் அரசியல் பண்பாட்டு வெளிகளில் தேசிய முதலாளித்துவக் கூறுகளை வீச்சாக உருவாக்கி வந்த இயக்கம் என்பதையும் உருவாகிவரும் இந்திய தேசிய ஏகாதிப்பத்தியத்திற்கும், நிலவுடைமை உற்பத்தி உறவுகளை பாதுகாக்கும் பார்பனிய சமூக-பண்பாட்டு நிறுவனங்களின் கூட்டிணைவிற்கும் எதிரானப் போரட்டத்தை தீவிரப்படுத்திய இயக்கம் என்பதையும் பார்க்கத்தவறிவிட்டார்.

 

 சில இடங்களில் இப்பொருளில் தனது நூலில் பெரியார் இயக்கத்தை அடையாளப்படுத்தினாலும் கலாச்சாரப் போராட்டம் பொருளாதார வர்க்கப் போராட்டத்தால்தான் நிறைவுபெறும் எனும் வாய்பாட்டால் பண்பாட்டு போராட்டமும் அதாவது மேல்கட்டுமானமும் சமூகத்தின் அடித்தளத்தை மாற்ற உதவும் எனும் மார்க்சிய கண்ணோட்டத்தையே மறுதலித்து விடுகிறார். இக்கண்ணோட்டம் பெரியாரிய இயக்கத்தின் சனநாயகக் கூறுகளை அதாவது பொது எதிரிக்கு எதிராக உள்ள அணியினரோடு இணைந்தும் போராடியும் முன்னேறுவது, வெகுமக்களின் உடனடித் தேவைகளிலிருந்தும் பொது அடையாளத்திலிருந்தும் அணிதிரட்டுவது, உருவாகி வரும் திராவிட / தமிழ்த் தேசிய உணர்வினோடு பிணைத்துக் கொள்வது, கருநிலையில் உருவாகிவரும் சனநாயக அரசியல் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வது போன்ற பொதுவுடைமை இயக்கத்திற்கான தேவைகளை அடையாளப்படுத்திய இயக்கமாக பெரியாரிய இயக்கத்தைக் கண்டு அதோனோடு உரையாடலை முன்வைக்கமால் விலகிசெல்லும் அணுகுமுறையை கொண்டிருக்கிறது.

 

கேசவனின் மற்றொரு நூலான  திராவிட இயக்கமும் மொழிக்கொள்கையும்எனும் நூலுக்கும் மேற்குறிய விமரிசனங்கள் பொருத்தமுடையன. மொழிக்கொள்கையின் வர்க்க கண்ணோட்டத்தை விளக்கப் புகுந்த கேசவன் காலனியக் காலம் தொட்டு திராவிட இயக்கம் முன்வைக்கும் இந்தி எதிர்ப்பானது ஆங்கில ஆதரவிற்கானதுதான் என்பதை நிறுவத் தரவுகளைத் தேடிய முயற்சியாகும். அதன் மூலம் திராவிட இயக்கம் தமிழ்த்தேசிய இனத்தின் மொழிக் கொள்கையைப் பிரதிபலித்த இயக்கம் இல்லை என்பதுதான் அவரது முடிவு. காலனியாதிக்கத்தில் அதாவது 1938ல் நடந்த பெரியார் இயக்கமும் தமிழியக்கங்களும் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு என்பதை, காலனிய ஆதரவு, ஆங்கில ஆதரவு என்பதாக காணும் கேசவனின் மதிப்பீட்டில் பார்ப்பனியத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் உள்ள உறவு விரிவுப்படுத்தி பார்க்கப்படவில்லை. தமிழிலக்கியங்கள், அமைப்புகள், அச்சுத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, சமஸ்கிருத மேலாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றின் துணைவிழைவாக தோன்றிய தமிழ்த் தேசிய ஓர்மை கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை.

 

 விடுதலைக்குப் பிறகான இந்திய அரசியலைமப்பை மையமாக கொண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் அண்ணாவின் பங்கையும் ஆங்கிலம் என்பது ஒரு தற்காப்பு போராட்டம் என்பதையும் கேசவன் விளக்கிக்காணவில்லை. அரசியல் அரங்கில் அண்ணாவின் உணர்ச்சிவயப் பட்ட பேச்சுக்களின் ஊடாக மக்களை ஏய்த்தவர் என்பதுதான் அவரது மதிப்பீடு, 1947 ஆகஸ்டு 15 தொடங்கி பெரியாரின் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து விலகிச் சென்ற அண்ணா முன்வைத்த அரசியல்வாதங்களும், நடைமுறைகளும் நீண்டகால நோக்கிலானவை, அரசியலில் உருவாகி வரும் சனநாயக பொறியமைவு முற்று முடிவானது அல்ல என்றும் அது வளர்த்தெடுக்கப் பட வேண்டியது என்றும் சுட்டிக்காட்டிய அண்ணா ஆங்கிலத்தை அரசியல் சாசனத்தில் இருக்கும்  தற்காப்புக் கருவியாக கொண்டது நடைமுறைக்கானதேயன்றி கொள்கை வழிப்பட்டதல்ல.

 

 சங்ககாலத் தொன்மையை மையமாகக் கொண்டு அண்ணாவின் இயக்கம் தமிழ்மக்களிடையே உருவாக்கிய தமிழுணர்வு எனும் அடிப்படைதான் இன்று வரை தமிழ் ஓர்மையையும், ஏக இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் எதிர் நிலையையும் தீர்மானித்துள்ளது. கம்பராமாயாணத்தையும் பெரிய புராணத்தையும் நிராகரித்த திராவிட இயக்கத்தின் சங்ககால பெருமித உணர்ச்சி ஏக இந்தியா சமஸ்கிருத மேலாதிக்கதிற்கு எதிரான அரசியல் நிலைப்பாடாகும்.

 

இந்திய சுதந்திரத்திற்கு பிறகான திராவிட இயக்கத்தின் மொழிக்கொள்கையை பெரியாரைக் கொண்டல்ல, அண்ணாவைக் கொண்டே அடையாளம் காண வேண்டும், அதனை வெறும் ஆங்கிலச் சார்புக் கொள்கை என்று காண இயலாது, தமிழ்நாட்டின் இறையாண்மையை திராவிட இனங்களின் கூட்டரசாக சிந்தித்துப் பார்த்த திராவிட இயக்கம் இனவாதப் போக்கிலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் ஆங்கிலம் தொடர்பு மொழி எனும் செயலுத்தி நிலைப்பாடுதான். எனினும் தமிழ்நாட்டிற்குள் நிலவும் ஆங்கில மேலாதிக்கைத்தையும் அதனை நீண்டகாலமாக தமிழ்நாட்டிலிருக்கும் திராவிட இயக்க அரசுகள் வலுப்படுத்தி வருவதையும், கேசவனது நூல்கள் வெளியான காலத்திற்கும் அதற்கு பிறகும் இந்திய ஆளும் தரப்போடு திராவிட இயக்கம் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் கூட்டணிகளையும், கொள்கை சமரசங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது கேசவனின் திராவிட இயக்கத்தின் மொழிக்கொள்கை மீதான விமரிசனங்களில் பல இன்றும் பொருத்தமுடையதாய், விவாதிக்கப்பட வேண்டியதாய் உள்ளன. உண்மையில் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் முகமாக திராவிட இயக்கம் முழுமையாகப் பரிணாமிக்க முடியாமல் இருப்பதற்கான கூறுகளைக் கேசவனின் விமரிசனம் சுட்டிக்காட்டுகிறது.

 

 சாரமாக கூறுவதென்றால் பொதுவுடைமை நோக்கிலிருந்து திராவிட இயக்கத்தை பகை ஆற்றலாக விமர்சித்த கேசவனது வளமான வாதங்கள்யாவும் இன்று நட்புமுரணாய் உரையாடலுக்குரியவனவாக உள்ளன. கேசவன் தான் எடுத்துக் கொண்ட பொருளிற்கு அரண்சேர்ப்பதற்கு காட்டியிருக்கும் பெரும் உழைப்பும், கொள்கை உறுதிப்பாடும், சமூக நோக்கும் அறிவுத்துறை என்பது மேதமைக்கான வெளியல்ல சமூகத்தின் வெகுமக்களுக்காக உழைக்கும் சமூக உழைப்புக் களமே என்று சான்று பகரும் ஆய்வாளர்களுக்கான பாலபாடமாகும்.

 

   - அன்பரசு.க.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...