மார்க்சியம் என்றால் என்ன - தோழர் அ.கா. ஈஸ்வரன்

மார்க்சியம் என்றால் என்ன?

லெனின்:- “மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிடுப்பென  நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக்காட்டவே செய்யும்.  ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல்  பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்தண்ணியமாகப் போராட வேண்டிய தேவை, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்தண்ணிமான, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது”

1) மார்க்சியம் என்றால் என்ன? 

காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுமையும் மார்க்சியம் ஆகும். இவர் தமது கோட்பாட்டைத் தனது நண்பரான எங்கெல்சுடன் இணைந்து படைத்தார். 

2) எங்கெல்சின் பங்களிப்பு மார்க்சியத்தில் இருந்தும் அவர் பெயர் ஏன் இடம் பெறவில்லை? 

இதற்கு எங்கெல்ஸ் தமது காலத்திலேயே பதில் அளித்துவிட்டார். மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்குவதிலும் குறிப்பாக அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் தமக்குப் பங்கு உண்டு என்றாலும் இதனை மார்க்சியம் என்று அழைப்பதே பொருத்தமானது என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார். மேலும் கூறுகிறார், ஏன் என்றால் சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும் என்கிறார். எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயர்ந்து நின்றார், அவர் ஒரு மேதையாக விளங்கினார், தம்மைப் போன்றோர்கள் திறமைசாலிகளே என்று எங்கெல்ஸ் தன்னடக்கத்துடன் விளக்கம் அளித்துள்ளார். எங்கெல்சே முடித்து வைத்த விவாதத்தை முடித்துக் கொள்வோம்.

3) மார்க்சியம் எதனை உள்ளடக்கி இருக்கிறது? 

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற மூன்று உள்ளடக்கத்தை மார்க்சியம் கொண்டுள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவை ஆகும். மனிதகுலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் விடை காணாத கேள்விகளுக்கு மார்க்சியம் விடை கண்டது என்பதில் தான் இதன் சிறப்பு அடங்கி இருக்கிறது. ஜெர்மானியத் தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் ஆகியவற்றின் தொடர்ச்சியே மார்க்சியம். இதன் அடிப்படையில் லெனின், மார்க்சின் போதனை மெய்யானது, அது எல்லாம்வல்ல தன்மை பெற்றுள்ளது, ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது, எந்தவித மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ மார்க்சிய உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது என்று உறுதிபடக் கூறுயுள்ளார்.

4) கம்யூனிசமும் மார்க்சியமும் ஒன்றா? 

ஒன்று தான். மார்க்சியத்தின் சோஷலிசம் கம்யூனிசமாகும். ஏன் இவ்வாறு கூற வேண்டிவருகிறது என்றால், பல வகையான சோஷலிசம்  இருக்கிறது. குட்டி முதலாளித்துவச் சோஷலிசம், நிலப்பிரபுத்துவச் சோஷலிசம், முதலாளித்துவச் சோஷலிசம் எனப் பல வகைகள் இருப்பதால் மார்க்சியத்தின் சோஷலிசத்தை, விஞ்ஞானச் சோஷலிசம் அல்லது விஞ்ஞானக் கம்யூனிசம் என்று அழைக்கப்படுகிறது. 

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மற்றொன்றையும் இங்கே அறிந்து கொள்ள வேண்டும். கம்யூனிச சமூகத்தை இரண்டு கட்டங்களாக மார்க்ஸ் வகுத்துள்ளார் அதில் முதல் கட்டம் சோஷலிச சமூகம் இரண்டாவது கட்டம் கம்யூனிச சமூகம் ஆகும். முதலாளித்துவச் சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்திற்குச் செல்வதற்கான இடைக்கட்டமே சோஷலிசக் கட்டம். மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கம்யுனிஸ்டுகள். இக் கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தைப் புரிந்து செயற்படுபவர்களாவர்.

5) மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கங்கள் எவை? அவை எதனை விளக்குகிறது? 

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற மூன்றும் மார்க்சியத்தின் உள்ளடக்கமாகும்.

தத்துவம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனை பற்றிய அறிதலின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகும். 

அரசியல் பொருளாதாரம் என்பது மனித சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாதச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், சமூகத்தில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது. 

விஞ்ஞானக் கம்யூனிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவச் சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது. 

6) இந்த மூன்றில் எது முதன்மையானது? 

அப்படிப் பிரிப்பது சரியல்ல, இருந்தாலும் கேட்டதற்காகச் சொல்வது என்றால். மூன்றாவதான விஞ்ஞானக் கம்யூனிசத்தைச் சொல்லலாம். ஏன் என்றால் இதனையே நாம் நடைமுறை படுத்துகிறோம். அதாவது கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. 

7) அப்படி என்றால் தத்துவமும், அரசியல் பொருளாதாரமும் அவ்வளவு முதன்மையானது கிடையாதா? 

கம்யூனிஸ்டுகளின் அரசியல், விஞ்ஞானத் தன்மை பெறுவது அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவம் இரண்டின் அடிப்படையில் தான். அதனால் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தில் முதன்மையானது என்று தனித்துப் பார்ப்பது சரியல்ல என்று முதலிலேயே கூறப்பட்டது. மூன்றும் தம்முள் உள்ளிணக்கம் கொண்டது. அதனால் கம்யூனிஸ்டுகள் இந்த மூன்றிலும் திறம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

8) மார்க்சியத்தில் அனைத்தும் உள்ளடங்கி இருக்கிறதா? 

இந்தக் கேள்வி, மார்க்சியம் என்பது சர்வரோக நிவாரணியா? என்று கேட்பது போல் உள்ளது. மார்க்சியம் சர்வரோக நிவாரணியாகப் புரிந்து கொள்வது தவறானது. அனைத்துப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை தயாராக மார்க்சியம் கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்கு ஒரு வழிகாட்டியே மார்க்சியம். இப்படிக் கூறுவதனால் மார்க்சியம் எதுபற்றியும் முழுமையாகக் கூறவில்லை என்று பொருள் கொள்ளக் கூடாது. மார்க்சியம் பலவற்றை முழுமையாக அணுகியிருக்கிறது. குறிப்பாகப் பருப்பொருள், அரசு, சமூகம், மதம், தத்துவம், பொருளாதாரம் போன்றவற்றை முழுமையாக அணுகப்பட்டு முடிவுகளை வழங்கியிருக்கிறது. இதனை இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் அணுகப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது புதிய போக்குகள் அல்லது கண்டிபிடிப்புகள் இதனைச் செழுமைப்படுத்தவே செய்யும். இதன் பொருட்டே மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பருப்பொருளைப் பற்றிய புதுவிளக்கம் லெனினால் கொடுக்கப்பட்டுள்ளது. அது மார்க்சின் கருத்தை செழுமைப்படுத்தியது.

9) இதுதான் லெனினியமா?

ஆம் இதுவும் லெனினியத்தில் அடங்கும்.

10) லெனினியம் என்றால் என்ன?

மார்க்சியத்தின் அடிப்படைகளைத் திருத்தல்வாதத்திலிருந்து மீட்டெடுத்ததும், முதலாளித்துவத்தின் புதிய நிலைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்தினுடைய போராட்டத்தைப் புதிய நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்ததும் லெனினியத்தின் பங்களிப்பாகும். சுருக்கமாகச் சொல்வது என்றால் ஏகாதிபத்திய காலத்தின் மார்க்சியமே லெனினியம். மார்க்சியத்தின் படைப்பாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு லெனினியம் திகழ்கிறது.

11. மார்க்சியத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய தொடக்க நூல்கள் யாவை?

மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய நூல்கள், கம்யூனிசத்தின் கோட்பாடுகள், கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை. லெனின் எழுதிய நூல்கள், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும், காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றி விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்), பிரெடெரிக் எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம், மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள், மார்க்சியமும் திருத்தல்வாதமும், மார்க்சியமும் சீர்திருத்தவாதமும். ஸ்டாலின் எழுதிய நூல்கள், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அராஜகவாதமா? சோசலிசமா?. 

தத்துவம்

லெனின்:- “தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமூகம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.”

12) தத்துவம் என்றால் என்ன?

இந்த உலகம் எங்கிருந்து வந்தது? மனித இனம் இவ்வுலகில் எவ்வாறு தோன்றியது? வாழ்க்கையின் சாரம் என்ன? இது போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தன்னை அறியாமலேயே தத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு எந்த விடையளித்த போதிலும் அதற்கு ஒரு தத்துவத்தின் உட்பொருள் இருக்கும். இவை அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்திற்குத் தக்கப்படி அமைந்திருக்கும். இவ்வகையில் தத்துவம் சமூக வாழ்வின் பிரதிபிலிப்பாகவே திகழ்கிறது.

 

13) தத்துவத்தைச் சுருக்கமாக ஒற்றை வரியில் கூறமுடிமா?

முடியும். இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றுடைய வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைத் தத்துவம் ஆராய்கிறது.  

 

14) அப்படி என்றால் தத்துவம் என்பது அவ்வளவு எளிதானதா?

இதில் எளிது கடினம் என்பதைவிட நமக்குத் தேவையானதா? தேவையற்றதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவையானதை எளிதாகவோ கடினமாகவோ கற்றுத்தான் ஆக வேண்டும். கற்கும் வழி அறிந்தால் எளிதானது, வழி அறியாதவரை கடினமானது. சுருக்கம் எளிமையாகத்தான் இருக்கும். அதனை விரித்துப் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

 

15) இயற்கைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தத்துவம் என்ன சொல்கிறது?

தொடக்கக் காலத்தில்இயற்கை, சமூகம் என்று தத்துவம் பிரித்து விவரிக்கவில்லை இருந்தாலும் இரண்டையும் விளக்கியிருக்கிறது. இந்த விளக்கம் தத்துவத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது

 

16) இந்த இரண்டு பிரிவு எது?

ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம்

 

17) இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

தத்துவம் எழுப்புகின்ற கேள்விக்கு அளித்திடும் பதிலைக் கொண்டு ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

18) அது என்ன கேள்வி-பதில்?

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதா? படைக்கப்பட்டது என்று பதிலளிப்பவர்கள் கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்களது விளக்கம் உலகம் ஏதோ ஒரு விதத்தில் படைக்கப்பட்டது என்கிற அனுமானத்தில் இருந்து தொடங்குகிறது. இயற்கைதான் முதன்மையானது என்று கருதுபவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

 

19) இரு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம். கருத்துமுதல்வாதத்திலும் பொருள்முதல்வாதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

 

20) கருத்துமுதல்வாதத்தின் பிரிவுகள் எத்தனை?

ஒன்று அகநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். அனைத்து கருத்துமுதல்வாதங்களும் இவ்விரு பிரிவுக்குள் அடங்கும்.

 

21) அகநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 

22) புறநிலை கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?

காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

 

23) இதே போல் பொருள்முதல்வாதத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவா?

ஆம் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம்.

 

24) இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

       இயந்திரகதிப் பொருள்முதல்வாதத்தையும், பகுத்தறிவுவாத நாத்திக பொருள்முதல்வாத்தையும் இயக்கமறுப்பியல் பொருள்முதல்வாதம் என்று கூறலாம். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் இயந்திரகதி தன்மையினைப் பெற்றதாக இருந்தது. இயற்கை, சமூகம் ஆகியவற்றை இயந்திரகதி வழியில் இயங்குவதாக விளக்கியது. இயற்கைப் பற்றிய விளக்கத்தில் இயலுலகிற்கு அப்பால் இருந்து தொடங்காமல், இயற்கையிடம் இருந்தே தொடங்கியது என்ற வகையில் இது முற்போக்கானதே. ஆனால் சமூகமும் இயற்கையும் மாறுதல் அற்றவையாகவும் மாற்ற முடியாதவையாகவும் விளக்கியது. பகுத்தறிவுவாதம் ஆன்மீகத்தை எதிர்க்கும் வகையில் அது பொருள்முதல்வாதமே. ஆனால் இந்த ஆன்மீகத்தின் தோற்றத்தை மனிதனது சிந்தனையில் கண்டது. அதற்கான புறநிலையை அறிந்து அதனடிப்படையில் போராடாமல், வெறும் அறிவுத்துறை போராட்டமாகச் சுருக்கியது. சிந்தனையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பகுத்தறிவில் கண்டது. பகுத்து அறியப்படுபவை எங்கிருந்து வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. கடவுளை மறுத்தலே அறிவுக்கு வழியாகக் கண்டது. கருத்தின் சார்புக்கும், அதன் மாற்றத்திற்கும் காரணமான பொருளயாத புறநிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. சிந்தனையைத் தர்க்க வழிப்பட்டதாகச் சுருக்கி விளக்கியது.

 

25) மார்க்சியம் எத்தகைய பொருள்முதல்வாதம்?

மார்க்சியம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கையையும் சமூகத்தையும் அறிந்திட முடியும், இவை இரண்டும் நமக்குப் புறத்தே நம்மைச் சார்ந்திடாமல் புறநிலையில் இயங்குகின்றன என்கிறது இத் தத்துவம். பொருள்முதல்வாதம் உலகை உள்ளது உள்ளபடியே காணவேண்டும் என்பதையும், உலகின் பொருளாயத ஒற்றுமையின் அடிப்படையைப் பருப்பொருளின் இணைப்பில் காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருள்முதல்வாத சிந்தனையில் புகழ்பெற்றவை கிரேக்கத்தில் டெமாக்கிரிட்டஸ், இந்தியாவில் சாங்கியம், ஆதிபுத்தர், உலகாயதர். சார்வாகர், அணுவாதம் பேசும் வைசேஷிகர் போன்றோரின் சிந்தனைகள். இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனையாளர்யாளர்களில் புகழ்பெற்றவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஜார்ஜ் தாம்சன், இந்தியாவில் தேவிபிரசாத் சாட்டோபாத்தியாயா, கோசாம்பி, ஆர்.கே.சர்மா, நா.வானமாமலை, கோ.கேசவன், இலங்கையில் கைலாசபதி போன்றோர்கள்.

 

 மரபுவழிப்பட்ட பொருள்முதல்வாதத்தன் தொடர்ச்சியே நவீன மார்க்சிய பொருள்முதல்வாதம். பழைய பொருள்முதல்வாதத்தில் காணப்படும் குறைகளையும் அதன் இயக்கமறுப்பியல் தன்மையையும் நீக்கி முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தோற்றுவித்தது.

 

26) இந்த இரண்டு தத்துவப் போக்கிற்கும், அடுத்தப் போக்கு அல்லது நடுப் போக்கு என்று எதேனும் இருக்கிறதா?

தத்துவத்தில் இரண்டு போக்கிற்கு இடையே நடுப்போக்கு என்றும் மூன்றாம் போக்கு என்றும் ஏதும் கிடையாது. தத்துவம் எழுப்பும் கேள்விக்குப் பதில் அளிப்பதில் இருந்து விலகுவதின் மூலம் இந்த நடு மூன்றாம் போக்கினர் கருத்துமுதல்வாதப் பாதையிலேயே பயணிக்கின்றனர். கதம்பவாதப் போக்கு கருத்துமுதல்வாத முடிவுக்கே இறுதியில் இட்டுச் செல்லும்.

 

27) கருத்துமுதல்வாதம் சிறந்ததா? பொருள்முதல்வாதம் சிறந்ததா?

இதற்கு நேரடியாக அல்லாமல் வேறுவிதமாகப் பதிலளிக்கலாம். அதாவது கருத்துமுதல்வாதம் தமது வாதத்தை அனுமானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கிறது. பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் கருத்துமுதல்வாதம் சிறப்பைப் பெற்றிருந்தது. ஏன் என்றால் பொருள்முதல்வாதத்திற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி அப்போது பெறவில்லை.

 

28) அதனால் தான் அன்று கருத்துமுதல்வாதத்தின் கையோங்கியிருந்ததா?

ஆமாம். இதனை எங்கெல்ஸ் சிறப்பாக விளக்கி இருக்கிறார். சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்துவதற்குத் தேவைப்படுகிற விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திய பொருளமுதல்வாதம், இயற்கைப் பொருள்முதல்வாதமாகவே இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத அன்றைய நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியில் ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும் கருத்துமுதல்வாதம் வந்தடைந்தது. எனவே பழைய பொருள்முதல்வாதம் அன்றைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது என்கிறார். விஞ்ஞான வளர்ச்சினால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுக்கிறது.

 

29) இன்றும் கருத்துமுதல்வாதம் மேலோங்கி தானே இருக்கிறது?

ஆம். உண்மை தான். இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்கள் சமூகச் சூழநிலையில் அடங்கி இருக்கிறது. மனித அறிதலின் போதாமையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நீக்கிவிட்டது உண்மையே, ஆனால் சமூகத்தின் வழியிலான அழுத்தம் முதலாளித்துவச் சமூகத்தில் கடுமையாகத் தொடர்கிறது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் முரண்களுடைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுத்தும் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் இன்றைய கருத்துமுதல்வாதத்தின் வேர்களாகிறது. அச்ச உணர்வே கருத்துமுதல்வாதத்தின் பிறப்பிடம். அதனால் தான் கம்யூனிஸ்டுகளின் நாத்திகப் போராட்டம் சித்தாந்தப் போராட்டமாகச் சுருக்கிவிடாமல், அதன் சமூக வேர்களை அகற்றும் போராட்டத்துடன் இணைத்துக் காணப்படுகிறது.

 

30) இயக்கவியலுக்கும் இயக்கமறுப்பிலுக்கும் என்ன வேறுபாடு?

இயற்கையிலோ, சமூகத்திலோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் காரியம் காரணத்தின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணக் காரிய இயக்கத்தை அறிவியல்படி விளக்குவது இயக்கவியல் விதியாகும். காரணக் காரியத்தை மறுப்பது இயக்கமறுப்பியல்.

 

31) இயக்கவியல் விதி எவை?

இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.

1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.

(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

2. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.

(The Law of the Unity and Struggle of Opposites)

3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி

(The Law of the Negation of the Negation)

 

32) இந்த மூன்றையும் அறிந்தால் இயக்கவியலை அறிந்து கொள்ளமுடியுமா?

எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடியும்.

 

33) இயக்கவியலின் வகையினங்கள் எவை?

1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

 

34) இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்தை காரணக் காரியத்துடன் அதாவது அதன் இயக்கப் போக்குடன் விளக்குவது இயக்கவியல். இன்றைய இருப்பிற்கான காரணத்தையும், நாளை ஏற்படப் போகும் மாற்றத்தையும், அதன் இயக்க விதியின் அடிப்படையில் கூறப்படுவதால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.

 

மார்க்சிய பொருள்முதல்வாத தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையின் இருப்பைப் பற்றிப் பேசுகிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மற்றொன்று சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 

35) மார்க்சியப் பொருள்முதல்வாத்துடன் இணைந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவை?

நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொணடு தம்மை நிலைநிறுத்தியது. 1.ஆற்றலின் உருமாற்றம், 2.உயிரணு, 3.பரிணாமக் கொள்கை ஆகியவை, விஞ்ஞானத்தின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளாகும்.

 

36) இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் என்ன முடிவுகளைத் தருகின்றன?

பொருளும் அதன் இயக்கமும் நிரந்திரமானவை, தோற்றுவிக்கவும் அழிக்கவும் முடியாதவை என்பதை ஆற்றலின் உருமாற்றம் பற்றிக் கோட்பாடு அறிவித்தது.

 

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உயிரிகளும் ஒரேவித உயிரணுக் கட்ட்டமைப்பைப் பெற்றுள்ளதை உயிரணு பற்றிய கோட்பாடு கண்டறிந்தது.

 

எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன. இன்றைய உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும் என்பதைப் பரிணாமக் கோட்பாடு வெளிக்கொண்ர்ந்தது.

 

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் வழியாக, இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை எவ்வித அயலான கலப்பின்றி, உள்ளதை உள்ளவாறு நவீன பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டது. கருத்துமுதல்வாதத்தால் இதுவரை முன்வைக்கப்பட்ட மேலுலகத்தின் அப்பாற்பட்ட தொடர்பு தேவையற்றது என விஞ்ஞான வழியில் மறுக்கப்பட்டது.

 

37) இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவற்றை எல்லாம் விளக்குகிறது?

குறிப்பாகப் பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பும் காலமும், உணர்வுநிலை என்பது பற்றிப் பேசுகிறது.

 

38) பருப்பொருள் என்றால் என்ன?

பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது.

 

39) பருப்பொருளும் இயக்கமும் என்றால் என்ன?

உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் எதுவும் இல்லை. பருப்பொருளின் இருப்பு என்பது இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் தவிர்த்து வேறு நிலையில் செயற்படுவதில்லை.

 

40) விசும்பும் காலமும் (Space and Time) என்றால் என்ன?

பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது. விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆகப் பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்ற பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பு என்பது விசும்பில் தான் நிகழ்கிறது. கண்ணில் படும் பருப்பொருளுக்குத் தான் நீளம் அகலம் உண்டு அதனால் தான் பொதுவாகப் பருப்பொருளுக்கு என்று கூறப்பட்டது. கண்ணில் படாத ஆனால் அதனைக் கருவிகள் மூலமோ மற்றவற்றின் உதவியோடு அறிந்திடும் பருப்பொருட்கள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள்அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றனஇந்த உறவுகள் எல்லையற்றதுஇதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறதுஇது காலத்துக்கும் பொருந்துகின்றதுகுறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறதுஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளனஅதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்குப் பின்பும் தொடர்கிறதுஆக இந்தத் தொடர் நிகழ்வுக்குத் தொடக்கமும் இறுதியும் இல்லைவிசும்புமும் காலமும் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

 

41) உணர்வுநிலை (Consciousness) பற்றிக் கூறுங்கள்?

உணர்வுநிலையைக் கொண்டே மனிதன் தமது செயல்களை அமைத்துக் கொள்கிறான். அதனால் தான் தத்துவ விவாதங்களில் உணர்வுநிலை முதன்மை இடம் பெறுகிறது.

 

42) உணர்வுநிலையைக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?

கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.

 

43) சமூகம் பற்றி மார்க்சியத் தத்துவம் என்ன கூறுகிறது?

சமூகம் பற்றிய மார்க்சியத் தத்துவம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை பெற்றதாகும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மார்க்சுக்கு முன்பான கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டுமே கருத்துமுதல்வாத தன்மையினதாகவே இருந்தது.

 

44) சமூகத்தைக் கருத்துமுதல்வாத கண்ணோட்டம் எப்படிப் பார்த்தது?

சமூகப் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் குறைபாடாக இரண்டை மார்க்ஸ் குறிப்பிடுகிறது. முதல்குறை என்னவென்றால், அது மனிதர்களின் சித்தாந்தத்தின் நோக்கங்களை மட்டுமே ஆராய்கிறது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாவதாக மக்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவேயில்லை. மக்களின் செயற்பாடுகளை நிர்ணயிப்பது எது? சமூகத்தில் கருத்துகளும் விருப்பங்களும் மோதுவதற்கான அடிப்படைக் காரணங்கள் எது? என்பதைப் பழைய வரலாற்றுக் கண்ணோட்டங்கள் அறிந்திருக்கவில்லை.

 

45) சமூகத்தை மார்க்சிய பொருள்முதல்வாதம் எப்படிப் பார்க்கிறது.

இயற்கையின் விதிகளைப் போன்றே சமூகமும் விதிகளின்படி செயல்படுகிறது, இந்த விதி மனிதனுடைய உணர்வுகளைச் சார்ந்திராமல் புறநிலையாக இருக்கிறது. அந்தப் புறநிலை உற்பத்தி முறையில் தோன்றுகிற உற்பத்தி உறவுகளில் அடங்கியிருக்கிறது. புறநிலை விதி மனித நடவடிக்கை மூலம் நடைபெறுகிறது. இதனை மார்க்சியம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்ற கோட்பாட்டால் விவரிக்கிறது.

 

46) அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்றால் என்ன?

குறிப்பிட்ட சமூகம் ஒர் உற்பத்தி முறையைக் கொண்டுள்ளது. அந்த உற்பத்தி முறையில் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியன அடங்கியிருக்கிறது. இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

 

தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத்தோன்றும் மேற்கட்டமைப்பாகும். அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடன் ஒன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்தத் தாக்கம் என்பது சமூக வளர்ச்சியை விரைவுடுத்தும் அல்லது தாமதப்படுத்தும். இதனையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை என்று கூறுகிறது.

 

47) சமூக வாழ்நிலை என்றால் என்ன?

உற்பத்தி நடிவடிக்கையின் போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளே சமூக வாழ்நிலை ஆகும். மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும்போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பொருளாயத உறவுகளே உற்பத்தி உறவுகள் எனப்படும். இந்த உறவுகளே சமூக வாழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. இந்த வாழ்நிலை மனிதர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்துப் புறநிலையாக இருக்கிறது.

 

48) சமூக உணர்வுநிலை என்றால் என்ன?

மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற உறவுகள், சமூக வாழ்நிலையாகும். இந்தச் சமூக வாழ்நிலைதான் அவர்களது சமூக உணர்வுநிலையைத் தோற்றுவிக்கிறது. சமூக உணர்வுநிலை என்பது நம்பிக்கைகள், கருத்துக்கள், சிந்தனைகள், தத்துவங்கள் போன்றவை ஆகும். இவை வாழ்நிலையைச் சார்ந்து நிற்கிறது.

 

49) அடித்தளம் என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?

சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது. இந்த உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

 

50) உற்பத்தி சக்திகள் (Productive Forces) என்றால் என்ன?

உற்பத்தி நிகழ்விற்குத் தேவைப்படுகிற உழைப்பின் குறிப்பொருள் (Objects of Labour), உழைப்புக் கருவிகள் (Instruments of Labour), உழைப்பு (Labour) ஆகிய மூன்றையும் உற்பத்தி சக்திகள் என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாகிறது.

 

51) உழைப்பின் குறிப்பொருள் என்றால் என்ன?

உற்பத்தியைத் தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருள் உழைப்பின் குறிப்பொருள் ஆகும். அதாவது எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள். உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாகக் கிடைப்பது, அவை பூமியிலிருந்து எடுக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு ஏற்ற நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும். மற்றது, கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, இரும்பாலான பொருளுற்பத்திக்கு இரும்பு கச்சாப்பொருள் ஆகும்.

 

52) உழைப்புக் கருவிகள் என்றால் என்ன?

உற்பத்தியின் போது மனிதன் பயன்படுத்தும் கருவிகளே உழைப்புக் கருவிகள். ஆதிகாலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில், அம்பு போன்றவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், தொழில்நுட்பம் போன்றவையும் ஆகும். இத்தகைய உழைப்புக் கருவிகளோடு, தொழிற்சாலை, மின்சாரம், ரயில்வே, கால்வாய், கிடங்கு போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகள் ஆகின்றன.

 

53) உழைப்பு என்றால் என்ன?

உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

 

54) உற்பத்தி உறவுகள் (Relations of Production) என்றால் என்ன?

       பொருளாயத நலன்களின் அடிப்படையில் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மனிதர்களுக்கு இடையே தோன்றுகிற பொருளாதார உறவுகளே உற்பத்தி உறவாகும்.

 

55) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான தொடர்பு எப்படிப்பட்டது?

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவைகளை உள்ளடக்கியவை உற்பத்தி முறையாகும். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்திட முடியாது. அதே நேரத்தில் இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்விரண்டில் உற்பத்தி சக்திகள் முதலில் வளர்ச்சி அடைகிறது, அதன்பிறகு உற்பத்தி உறவில் மாற்றம் பெறுகிறது. உற்பத்தி சக்திகளின் இயல்புக்குப் பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். ஆனால் இந்தப் பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி ஏற்பட்டு முதிரும்போது முரணும் முற்றுகிறது.

 

56) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

 

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண் பெருகுகிறது. உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சியடைகிறது, புதியதாக வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்தியோடு பழைய உற்பத்தி உறவுகள் பொருந்தாமல் முரண்படுகிறது. பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்தி சக்தியை தடுக்க முற்படுகிறது. புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

 

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாறுகிறது. புதிய உற்பத்தி சக்திகளுக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகள், பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்தி முறையிலிருந்து, மற்றொரு உற்பத்தி முறைக்கு மாற்றம் அடைவதில் அடங்கியிருக்கிறது. அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையில் இருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் செல்வதாகும். சமூக மாற்றம் என்கிற சமூகப் புரட்சி இதில் தான் அடங்கியிருப்பதாக மார்க்சியம் கூறுகிறது.

 

57) மேற்கட்டமைப்பு என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?

அடித்தளத்தளமே மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது. ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் ஏற்கிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கிறது. இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும். மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குக் கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தச் சார்பான தாக்கத்தை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதை இறுதியில் நிருபிக்கிறது.

 

58) அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பை பரஸ்பர வினையாகக் கொள்ளலாமா?

அது பெரும் தவறாகும். அப்படிப் பரஸ்பர வினைபுரிந்தால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தி இருக்க மாட்டார். அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது பொருள்முதல்வாதம், சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பது கருததுமுதல்வாதம். இதனை ஏற்றுப் புரிந்து கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தைத் தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்ட வயப்பட்டதேயாகும்.

 

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது-நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது இதற்கு மேலே செல்வது மார்க்சியமாகாது.

 

59) மேற்கட்டமைப்பில் எவைகள் அடங்குகின்றன?

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் தம்முள் நெருக்கமான இணைப்பைப் பெற்றவை. அடித்தளமே நிர்ணயகரமான தன்மை பெற்றது, அது மேற்கட்டமைப்புக்குக் காரணமாகிறது. மொத்தத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. பொருத்தமாக என்று சொன்னவுடன் மேற்கட்டமைப்பில் ஒரேவித சிந்தனை ஏற்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. வர்க்க சார்பாகவே சிந்தனை எழுகிறது. அடித்தளத்தில் காணப்படும் முரண் வர்க்க பிரிவுகளின் சிந்தனையாக வெளிப்படுகிறது. அரசியல், மதம், பண்பாடு, கலைகள் போன்ற கருத்துநிலைகள் மேற்கட்டமைப்பில் அமைகிறது.

 

60) மதம் பற்றி மார்க்சியம் என்ன கூறுகிறது?

பகுத்தறிவுவாதிகளைப் போல் மதம் ஏமாற்றுக்காரர்களின் படைப்பு என்பதை மார்க்சியம் மறுக்கிறது. தமக்கு ஒரு மதம் தேவை என்று தாமே உணரும் மக்களாலும், வெகுமக்களின் மதத் தேவையைப் பற்றிய உணர்வைப் பெற்றவர்களாலுமே மதங்கள் நிறுவப்படுகின்றன என்றே எங்கெல்ஸ் கூறுகிறார்.

 

61) பகுத்தறிவுவாதமும், மார்க்சியமும் மதத்தை மறுக்கிறது அல்லவா?

இரண்டும் மதத்தை மறுப்பதில் ஒரே கருத்துடையது. எவ்வாறு மறுக்கிறது என்பதில் வேறுபடுகிறது. பகுத்தறிவு வாதம் மதத்தை மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் பார்க்கிறது. வர்க்கப் போராட்டத்திற்கு அப்பாற்பட்ட அறிவுத்துறைப் பிரச்சினையாக மதத்தைப் பார்ப்பது தவறான பாதை என்றும் மதமெனும் மூடநம்பிக்கைகளை வெறும் பிரசாரத்தின்மூலம் நீக்கிவிட முடியும் என்பது அசட்டுத்தனமானது என்கிறது மார்க்சியம்.

 

62) அப்படி என்றால் மத எதிர்ப்புப் பரப்புரை அவசியமற்றதாக மார்க்சியம் கருதுகிறதா?

அப்படியில்லை. “மக்களின் அபினி மதம் என்பதே மார்க்சியத்தின் நாத்திகக் கொள்கை. மதம் என்பதை, தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்கான பிற்போக்கின் கருவியாகவே மார்க்சியம் கருதுகிறது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை முதல்நிலைக்குக் கொண்டு வருவதைத்தான் மறுக்கிறது. அதனைக் கையாளுவதில் கவனத்தைச் செலுத்துகிறது. அது எவ்வாறு என்றால், வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டதாக நாத்திகப் பிரச்சாரம் இருக்க வேண்டும். மத எதிர்ப்பென்பது சூக்குமமான சித்தாந்த அளவில் சுருக்கிக் கொள்ளக் கூடாது. மத இருப்பிற்கான சமூக வேர்களை அகற்றும் நோக்கத்துடன் இணைத்து நடத்தப்பட வேண்டும்.

 

அது எப்படிப்பட்டது என்றால், மதத்தின் தோற்றம், இருப்பு, மறைவு பற்றிய அதன் புறநிலை தன்மையோடு விளக்கப்பட வேண்டும். மதம் மறைவதற்கான புறநிலையை நோக்கிய சமூக மாற்றத்திற்கான போராட்டத்துடன் பரப்புரை இணைக்க வேண்டும்.

 

63) மதத்தின் தோற்றத்தைப் பற்றி மார்க்சியம் என்ன கூறுகிறது?

இயற்கை மற்றும் சமூகத்தின் முன்பான மக்களின் இயலாத் தன்மையே மதத்தின் தோற்றத்துக்கு முதன்மையான இரு காரணங்களாகும். காட்டு மிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான தனது போராட்டத்தில் இயலாத நிலையே மதத்தின் தோற்றத்திற்கு முதல் காரணமாகும். சமூகத்தில் சுரண்டல் அமைப்புத் தோன்றியபோது, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் மனிதனின் இயலாத் தன்மை இரண்டாவது காரணமாகும்.

 

64) மதத்தின் மறைவைப் பற்றி மார்க்சியம் என்ன கூறுகிறது?

மதம் சமூக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் தோன்றியது. தோன்றியவை தோற்றத்திற்கான காரணங்கள் இருக்கும்வரை நிலைத்திருக்கும், அந்தக் காரணங்களின் மறைவை ஒட்டிக் காரியமும் மறைந்து போகும். இயற்கைப் பற்றிய அறியாமை விஞ்ஞான வளர்ச்சினாலும், சுரண்டல் சமூகத்தால் தோன்றிய அச்சம் சுரண்டல் சமூகத்தின் மறைவோடு மறைந்துபோகும். மனித சமூகத்தின் தொடக்கம் மதம் அற்றதாகவே இருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறு மதம் இல்லாத சமூகம் தோன்றும்.

 

65) அதுவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மதத்தின் மீதான அணுகுமுறை எவ்வாறு இருக்கும்?

கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் இயக்கமாகும். இப்படிப்பட்ட ஒர் இயக்கம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்கிறார் லெனின். மூலதனத்திற்கும் மதப் பரப்புரைக்கும் இடையில் உள்ள இணைப்பைக் கொண்டு மதத்தின் வர்க்கத் தன்மையை மார்க்சியம் அறிந்திருக்கிறது. மூலதனத்திற்கு மதத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்திருக்கிறது. மதத்திற்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையேயுள்ள உறவையும் சார்பையும் அறிந்திருக்கிறது. இந்தத் தெளிவோடு மதத்தை எதிர்த்துப் போராட மார்க்சியம் அழைக்கிறது. விழிப்படைந்த உழைக்கும் மக்களைப் படிப்படியாக மத மாய்மாலத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். மதத்தின் சமூக வேர் முழுமையும் அற்றுப் போகும் போது மத நம்பிக்யையுடையவர் முழுமையாக இல்லாது போவார்கள். அதுவரை வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்ட வகையில் மதத்தைக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தும் விமர்சித்தும் போராடுவார்கள்.

 

66) வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டமாகக் காணப்படுகிறது. அதாவது ஆதி பொதுவுடைமை சமூகத்தில் வர்க்கம் காணப்படவில்லை, அவர்கள் கூட்டு சமூகமாகவே வாழ்ந்தனர். கூட்டாகவே முடிவெடுத்தனர், இருப்பதைக் கூட்டாகவே பகிர்ந்தனர். ஆதி பொதுவுடைமை சமூகம் வளர்ச்சியுற்ற நிலையில், தேவைக்கு மேலே சற்றுக் கூடுதலாக உபரி ஏற்பட்ட போது தனிச்சொத்து ஏற்படுகிறது. தனிச்சொத்துடைமையின் தோற்றத்தோடு வர்க்கங்கள் தோன்றின. ஒரு குறிப்பிட்ட பொருளாதார உற்பத்தி முறையில் உள்ள உற்பத்திச் சாதனங்கள் யாரிடம் இருக்கிறதோ, அந்தச் சொத்துடைமையாளர்களின் விருப்பப்படி வினியோகம் நடைபெறுகிறது, அந்த அடிப்படையில் உற்பத்தி உறவுகள் ஏற்படுகிறது. இந்த நிலைமைகளின் அடிப்படையில் வர்க்கத்தின் இருப்பும், போராட்டமும் நடைபெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், உற்பத்தி சாதனங்களுக்கு இடையேயான, மனிதனுடைய உறவில்தான் வர்க்கத்தின் சாராம்சம் அடங்கியிருக்கிறது. அதாவது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே காணப்படும் முரணே வர்க்கப் போராட்டத்தைத் தோற்றுவிக்கிறது.

 

67) இன்றைய சமூகத்தில் வர்க்கப் பிரிவு எவ்வாறு உள்ளது?

முதலாளித்துவச் சமூகத்தில் முதன்மையான வர்க்கப் பிரிவு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் காணப்படுகிறது. முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளிகள் நடத்தும் வார்க்கப்போராட்டம் பொருளாதாரம், அரசியல், மற்றும் சித்தாந்தம் என்கிற மூன்று வழிகளில் நடைபெறுகிறது.

 

68) பொருளாதாரப் போராட்டம் என்றால் என்ன?

முதலாளிகள் அதிக ஆதாயம் பெறுவதற்கும், அதனைத் தக்க வைப்பதற்கும் தேவைப்படுகின்றவற்றில் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு முனைப்பாக இருக்கிறார்கள், இந்நிலையில், பாட்டாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக நடத்தும் போராட்டம், பொருளியல் போராட்டமாகும். பாட்டாளிகளின் பொருளியல் நிலைமைகளை மேப்படுத்துவதற்கும், சுரண்டலில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதாவது குறைத்துக் கொள்வதற்கும், இருப்பதைவிட மேம்பட்ட உழைக்கும் சூழ்நிலைகளுக்கும், ஊதிய உயர்விற்கும், வேலைநேரக் கட்டுப்பாடிற்கும் ஆன போராட்டமாகும். குறிப்பாகச் சொன்னால் பாட்டாளி தங்களது நலவுரிமைக்கும், பாதுகாப்பிற்கும் நடத்தும் போராட்டமாகும். பாட்டாளிகள், தங்களது உடனடி பொருளாதார நலன்களை முன்னிருத்தி போராடுகின்றனர். இதற்கு அவர்கள் சங்கம் அமைத்துக் கொள்கின்றனர். இது வர்க்கப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாகும். இந்த உடனடி பொருளாதார நலனுக்கான போராட்டம் தமக்கு முழுவிடுதலையைத் தரவில்லை என்பதை அறிந்து கொண்டு இறுதி குறிக்கோளுக்காகப் போராடுவது அரசியல் போராட்டமாகும்.

 

69) அரசியல் போராட்டம் என்றால் என்ன?

பொருளாதாரப் போராட்டத்தின்போது பாட்டாளிகள் கூட்டம் கூடுவதற்கும், சங்கம் நடத்துவதற்கும், தமக்கான பத்திரிகை நடத்துவதற்கும் ஆன உரிமைகளை நிலைநிறுத்துவதற்குச் சேர்த்து போராட வேண்டிவருகிறது. இவ்வாறு பாட்டாளிகளின் போராட்டம் அரசியல் போராட்டமாக வடிவெடுக்கிறது. போராடிப் பெற்ற சிறு சலுகைகளைத் தக்க வைப்பதற்கும், இதனைச் சட்டமாக்குவதற்கும், தேவையான அரசியல் போராட்டத்திற்காக, தங்களது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டி வருகிறது, இதன் மூலம் பொருளாதாரப் போராட்டம் அவர்களை அரசியல் போராட்டத்திற்கு இட்டுச்செல்கிறது. இந்த அரசியல் போராட்டம் அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்தி இறுதி குறிக்கோளுக்காகப் போராடுவதற்குச் சித்தாந்தத்தை அமைத்துக் கொள்கின்றனர்.

 

70) சித்தாந்தப் போராட்டம் என்றால் என்ன?

தன்னியல்பான பொருளாதாரப் போராட்டத்துடன், அரசியல் போராட்டமும் இணையும் போது, பாட்டாளிகளின் அரசியல் உணர்வு மேலோங்குகிறது. அரசியல் கோரிக்கைகள் அவர்களின் கம்யூனிச உணர்வை வளர்த்து விடுகிறது. முதலாளிக்கு எதிரான போராட்டத்தில், பாட்டாளிகள் சங்கமாய் இணைந்து போராடும் போது, பாட்டாளிகள் ஒரு வர்க்கமாய்ச் சேகரமாகிறார்கள். வர்க்கமாய்த் தமது போராட்டத்தை நடத்தும்போது, முதலாளிக்கு எதிராக நடத்துகிற போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கிய போராட்டமாக உருமாறுகிறது. இந்தப் போராட்டத்தில் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தைச் சட்டமுறைகளிலும், சட்டத்திற்கு எதிரான வழிகளிலும் ஒடுக்க முற்படுகிறது. அப்போது முதலாளித்துவ அரசிற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ அமைப்பு முழுமைக்கு எதிரான போராட்டமாகவும் மாறுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை, அரசியல் போராட்டமாகத் தொடரச் செய்யும் போது, உருவான நோக்கங்கள், குறிக்கோள்கள், போராட்ட முறைகள் ஆகியவை பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாகத் திரட்டப்படுகிறது. முதலாளித்துவச் சித்தாந்தத்தை எதிர்கொள்ளும் வகையில், பாட்டாளிகள் தங்களது சித்தாந்ததை உருவாக்க வேண்டியிருக்கிறது. சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவத்தை, சங்கம் அமைத்து எதிர்க்கும் போது, சமூகத்தில் உள்ள அனைத்துவித தொழிலாளர்களின் சங்கங்களையும் இணைத்து வழி நடத்துவதற்கு, பாட்டாளிகளுக்குப் புரட்சிகரமான கட்சி தேவைப்படுகிறது.

 

71) அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரம் சமூக மாற்றத்தை நிகழ்த்தாதா? இதற்கு ஒரு கட்சி தேவையா?

இயற்கை மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. பொதுவான இயற்கை மாற்றம் மக்களைச் சார்ந்தது கிடையாது, ஆனால் சமூக மாற்றம் மக்களின் வழியிலேயே நடைபெறுகிறது. அதாவது சமூகம் பற்றிய விதி மக்களின் வழியேதான் செயற்படுகிறது. அதனால் உழைக்கும் மக்களும், மக்களுக்கான கட்சியும் தேவையாகிறது.

 

72) கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாகக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாகக் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும். இக்கட்சி உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் அடிப்படையாகிறது.

 

புறநிலை விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகும். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.

 

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்பதை லெனின் வலியுறுத்திக் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு, அதன் உள்முரண்பாட்டிற்குத் தீர்வாய், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும்.

 

73) மார்க்சியத் தத்துவத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய நூல்கள் மதத்தைப் பற்றி, எங்கெல்ஸ் எழுதிய நூல், லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும். லெனின் எழுதிய நூல்கள் அரசு, அரசும் புரட்சியும், மதத்தைப் பற்றி. ஸ்டாலின் எழுதிய நூல், இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும். மா சே துங் எழுதிய நூல்கள், முரண்பாடு பற்றி, நடைமுறை பற்றி, மக்கள் மத்தியில் முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி, மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன?. ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய நூல் மார்க்சிய மெய்ஞானம்நா.வானமாமலை எழுதிய நூல்கள், இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும்மார்க்சிய சமூகவியல் கொள்கை. மாரிஸ் கான்போர்த் எழுதிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், அ.கா.ஈஸ்வரன் எழுதிய நூல் மார்க்சிய தத்துவம்.

 அரசியல் பொருளாதாரம்

லெனின்:- “பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டமைப்புக் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பான்மையான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ - சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்… உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரக் கோட்பாட்டிற்கு மூலைக்கல் ஆகும்”

74) அரசியல் பொருளாதாரம் எதனை ஆராய்கிறது?

பொருள் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மக்களுக்கு இடையே ஏற்படுகிற உறவுகளை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்கிறது மார்க்சியம். தமது அரசியல் பொருளாதாரத்தை, விஞ்ஞானத் தன்மை பெற்றதாகக் கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.

 

75) இது மார்க்சிய பொருளாதாரம் என்றால் மற்றவர்கள் பொருளாதாரத்தை வேறு மாதிரி பார்க்கிறார்களா?

ஆம். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விஞ்ஞானத் தன்மை பெற்றது என்று கூறினாலும், இது பாட்டாளி வர்க்க சார்பானது. அதே போல் செம்மை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், கொச்சை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்ற பிரிவுகள் இருக்கின்றன

 

76) செம்மை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளித்துவம் உருவான போது தோன்றியது செம்மை அரசியல் பொருளாதாரம். முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான முரண் முழுமையாக அப்போது வெளிப்படவில்லை. பாட்டாளிகள் வர்க்கம் உணர்வுப் பெற்றுப் போராடாத காலம் அது. ஆடம் ஸ்மித், ரிக்காடோ போன்றோர்கள் செம்மை அரசியல் பொருளாதார வகையைச் சேர்ந்தவர்கள்.

 

77) கொச்சை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே வர்க்கப் போராட்டம் பெருகிய போது விஞ்ஞானத் தன்மையில்லாமல் முதலாளித்துவத்தை ஆதரிக்கின்ற போக்கு, கொச்சை அரசியல் பொருளாதாரம் ஆகும்

 

78) குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

முதலாளித்துவ உற்பத்தியாளருக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள சிறுவுற்பத்தியாளர்கள் குட்டி முதலாளித்துவாதிகளாவர். இவர்களில் பலர் நிலைமையால் பாட்டாளி வர்க்கத்தைச் சேர வேண்டியிருந்தாலும் விருப்பத்தால் முதலாளித்துவத்தைச் சார்ந்து சிந்திப்பர். இவர்களின் பொருளாதாரச் சிந்தனை குட்டி முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் ஆகும்.

 

79) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் என்ன?

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில், உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகிய கட்டங்களைப் பரிசீலனை செய்வது மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கம் ஆகும்.

 

80) முதலாளித்துவ உற்பத்திமுறையைப் பற்றி மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ன சொல்கிறது?

அரசியல் பொருளாதாரத்தின் உள்ளடக்கத்தின்படியே முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இறுதியில் அதன் மறைவையும் விவரிக்கிறது.

 

81) பிரம்மாண்டமான முதலாளித்துவ உற்பத்திமுறை எப்படி மறையும்?

இந்த மறைவு என்பது மார்க்சின் தனிப்பட்ட விருப்பம் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாடுகளே அதன் மறைவையும், அந்த மறைவை நிகழ்த்தப் போகும் பாட்டாளிகளையும் படைத்துள்ளது.

 

82) தொழிலாளர்களும் முதலாளிகளும் பரஸ்பரம் சமரசமாகப் பேசி தங்களது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாதா?

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பிரச்சினை வெறும் மனம் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதால் தான் இந்தக் கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் மனம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட நலன்களைச் சார்ந்து தோன்றுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையில் காணப்படும் முரணில் இவர்களின் நலன்கள் அடங்கியிருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண் இணக்கம் காணமுடியாத இரு வர்க்கமாகப் பிரிக்கிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கருத்தாக்கம் இதனையே விவரிக்கிறது. இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கமே வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது.

 

83) அரசியல் பொருளாதாரத்தில் தத்துவமா?

ஆம். பொருளாதாரத்தில் காணப்படும் அரசியலை அறிவதற்குத் தத்துவம் அவசியமாகிறது. முதலாளித்துவ அறிஞர்களின் அரசியல் பொருளாதாரம் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது, பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது.

 

84) தத்துவத்தையும் பொருளாதாரத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் படித்தறிவது கடினமானதா?

விஞ்ஞானத்தை அறிவதற்கு ராஜபாதை எதுவும் கிடையாது, களைப்பூட்டும் செங்குத்துப் பாறையில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சியினை எட்டுகிற வாய்ப்புண்டு என்று மார்க்ஸ் பிரஞ்சு வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது நமக்கும் பொருந்த கூடியதே. அரசியல் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தை அறிவதற்கு நாம் உரிய கடின முயற்சி எடுக்கத்தான் வேண்டும். அரசியல் பொருளாதாரத்தை அறிவதில் உள்ள கடினத்தைக் குறைக்க வேண்டுமாயின். அரசியல் பொருளாதாரத்திற்கு உரிய வகையினங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு அறிந்திடும் போது கடினம் குறையும்.

 

85) மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் வகையினங்கள் எவை?

தொடக்கநிலையில் அறிவதற்கான வகையினங்கள் சரக்கு, சரக்கின் இரட்டைத் தன்மை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம், உழைப்பின் இரட்டைத் தன்மை, பரிவர்த்தனை, பணம், மூலதனம், உழைப்பு சக்தி, உபரி மதிப்பு, மாறா மூலதனம், மாறும் மூலதனம், பொருளாதார நெருக்கடி, சமூக மாற்றம், உற்பத்தி முறை ஆகியவையாகும்.

 

86) சரக்கு (commodity) என்றால் என்ன?

முதலாளித்துவத்தில் செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காணப்படுகிறது. அதனால் தான் மார்க்ஸ் தமது மூலதனம்” நூலை சரக்கு பற்றிய பகுப்பாய்வில் இருந்து தொடங்கினார். சரக்கு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்கின்ற குணங்களைக் கொண்ட ஒன்று. அது உடுப்பதற்கான உடையாகவோ, சாப்பாட்டுப் பொருளாகவோ, மனதுக்கு மகிழ்வூட்டுவதாகவோ இருக்கலாம்.

 

87) சரக்கின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

சொந்த நுகர்வுக்காக இல்லாமல் விற்பனைக்காக உற்பத்தி செய்யும் பொருள் சரக்காகும். சந்தைக்குச் செல்கின்ற அச்சரக்கு இரட்டைத் தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு. இந்த இரட்டைத் தன்மையை மார்க்சே முதன்முறையாகக் கண்டுபிடித்தார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

 

88) பயன்மதிப்பு (use-value) என்றால் என்ன?

சரக்கு பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இந்தப் பொருள் எதேனும் மனிதத் தேவையை நிறைவு செய்யும் வகையில் இருக்க வேண்டும். அந்த நிறைவேற்றமே பயன்மதிப்பு எனப்படும். அரிசி, இறைச்சி, பால் போன்றவை மனிதனின் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை, புடவை போன்றவை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. கவிதை, கதை, நாடகம், திரைப்படம் போன்றவை கலை உணர்வை நிறைவு செய்கிறது. நுகர்வின் அல்லது பயன்படுத்துவதின் மூலம் பயன்மதிப்பு உண்மையாகின்றது.

 

89) பரிவர்த்தனை மதிப்பு (exchange-value) என்றால் என்ன?

சந்தையில் சந்திக்கின்ற சரக்குகள் ஒவ்வொன்றும் தம்முள் ஒப்பீட்டு மதிப்பைப் பெற்றுள்ளது. அதாவது 10 முட்டைக்கு ஒரு கிலோ அரிசி என்று ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடு அச்சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. அந்த உழைப்பின் மதிப்பே பரிவர்த்தனை மதிப்பு என்றழைக்கப்படுகிறது. சரக்குகளில் காணப்படும் பயன்மதிப்பை நீக்கிப் பார்க்கும் போது அதாவது உழைப்பின் ஸ்தூலமான வடிவங்களை நீக்கிவிட்டுப் பார்க்கும் போது அனைத்துக்கும் பொதுவான ஒரே உழைப்பாக ஸ்தூலமற்ற மனித உழைப்பாக இருக்கிறது. சந்தையில் பரிவர்த்தனை செய்திடும் போது பயன்மதிப்பை சற்றும் சார்ந்திராத பரிவர்த்தனை மதிப்பாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

 

90) சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பைக் கொண்டு மதிப்பை கணக்கிடும் போது திறம்பெற்ற உழைப்பாளியின் உழைப்பும், திறமற்ற உழைப்பாளின் உழைப்பும் சம மதிப்பைப் பெறுகிறதா?

இது சரியான கேள்வியே. ஒரு பொருளை உற்பத்தி செய்யத் திறமையான தொழிலாளி எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட, திறம்குறைந்தவர் அதிக நேரத்தையே எடுத்துக் கொள்வார். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லையாயின், உழைப்பாளி எவ்வளவு அதிகம் சோம்பேறியாகவும் தேர்ச்சியற்றவராகவும் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகம் மதிப்புள்ளதாக அவரது சரக்கு இருக்கும், ஏனெனில் அவரது உற்பத்திப் பொருளில் அதிக உழைப்பு நேரம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படிக் கணக்கிடப்படுவதில்லை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரத்தைக் கொண்டே மதிப்புக் கணக்கிடப்படுகிறது.

91) சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்றால் என்ன?

ஒரு புடவையைச் செய்ய ஒரு நெசவாளி 8 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும், மற்றொருவர் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், வேறொருவர் 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் கொண்டால், மூவரின் சராசரி 6 மணிநேரமாகிறது. இந்தச் சராசரி உழைப்பின் நேரத்தை, சமூகவழியில் அவசியமான உழைப்பின் நேரம் என்று அழைக்கப்படுகிறது. முதல் நெசவாளி 8 மணிநேரம் எடுத்துக் கொண்டா லும் அதன் மதிப்பு 6 மணிநேரமாகும். இரண்டாவது உள்ளவர் 4 மணி நேரத்தில் முடித்தாலும் அதன் மதிப்பு 6 மணி நேரமாகும். மூன்றவது நபர் சாராசரி மதிப்புக்கு ஒத்த நேரத்தை எடுத்துக் கொள்வதால் அதே மதிப்பைப் பெறுகிறது.

 

92) உழைப்பின் இரட்டைத் தன்மை என்றால் என்ன?

ஒன்று ஸ்தூலமான உழைப்பு (concrete labour), மற்றொன்று ஸதூலமற்ற உழைப்பு. (abstract labour) இதுவும் மார்க்சின் கண்டுபிடிப்பே.

 

93) ஸ்தூலமான உழைப்பு என்றால் என்ன?

பொருள் என்னவாக உருவம் கொள்கிறதோ அதற்காக உழைப்பது ஸ்தூல உழைப்பாகும். துணி நெய்யப்பட்டதில் காணப்படும் நெசவும், தானியம் உற்பத்தி செய்யப்பட்டதில் காணப்படும் உழவும் ஸ்தூல உழைப்பு. முதலாவது துணியை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு, மற்றொன்று தானியத்தை உற்பத்தி செய்வதற்குச் செய்யப்பட்ட உழைப்பு. நெசவு, உழவு என்று இவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இவை இரண்டும் பயன்படக்கூடியதே. இந்த ஸ்தூல உழைப்பே சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது.

 

94) ஸ்தூலமற்ற உழைப்பு என்றால் என்ன?

பொருளை உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்படுகிற சக்தி அதாவது தசை மூளை போன்றவற்றைக் குறிக்கிறது. ஸ்தூலமான உழைப்பைச் சாராது தனியே பரிசீலனை செய்திடும்போது உழைப்பு மனிதனது சக்தி என்ற நிலையில் அது ஸ்தூலமற்ற உழைப்பு எனப்படுகிறது. இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

 

95) பணம் என்றால் என்ன?

பணத்தின் சாரத்தை மார்க்ஸ் பொருள்முதல்வாத வழியில் அணுகினார். உற்பத்தியோடும், பரிவர்த்தினையின் வளர்ச்சியோடும், மதிப்பு வடிவங்களின் வளர்ச்சியோடும் பணத்தைத் தொடர்புபடுத்தி விளக்கினார். சரக்கு உற்பத்தியில் தனித்தனி உற்பத்தியாளர்கள் தனிமைப்பட்டுப் போகாமல் பிணைப்பை ஏற்படுத்துவது பணம் ஆகும். சரக்குப் பரிவர்த்தனையில் மற்ற அனைத்துச் சரக்குகளின் மதிப்பை வெளியிடக் கூடிய சரக்காகச் சர்வபொது சமானமாகப் பணம் திகழ்கிறது.

 

96) மூலதனம் (Capital) என்றால் என்ன?

       பணம் தானே மூலதனமாவது இல்லை. முதலாளித்துவத்திற்கு முன்பே பணம் இருந்துள்ளது, ஆனால் அதனை மூலதனம் என்று அழைப்பதில்லை. சரக்கு உற்பத்தி வளர்ச்சியின், குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் போது பணம் மூலதனமாகிறது, முதலாளித்துவத்திற்கு முன்பான எளிய உற்பத்தி முறையின் சூத்திரம் சரக்கு-பணம்-சரக்கு என்ற அடிப்படையில் இயங்கியது. விளைவித்த சரக்குப் பணத்திற்கு விற்று அதனைக் கொண்டு தேவைப்படும் சரக்கு வாங்கப்பட்டது. அதாவது சரக்கு மற்றொரு சரக்கு வாங்குவதற்காக விற்கப்பட்டது.

முதலாளித்துவத்தில் விற்பனைக்காகச் சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சூத்திரம் பணம்-சரக்கு-பணம். முதலாளித்துவத்தில் உற்பத்தி பணத்தைக் கொண்டு தொடங்கப்படுகிறது. அதாவது முதலாளி பணத்தின் மூலம் உற்பத்திக்கு தேவையானதை வாங்கி  உற்பத்தியின் மூலம் விளைவித்ததைப் பணத்திற்கு விற்கிறார். முதலில் போடப்பட்ட பணத்தைவிடக் கூடுதலாய் பணம் இதன் மூலம் கிடைக்கிறது. முதலில் போட்டப் பணத்திற்கு மேல் கூடுதலாய் பணம் கிடைக்கும் வகையில் இயங்குவதே மூலதனம் எனப்படுகிறது. இந்தக் கூடுதல் பணம் உழைப்பாளியின் உபரி நேரத்தின் உழைப்பில் விளைந்த உபரி மதிப்பால் கிடைத்ததாகும். இதனையே முதலாளி இலாபம் என்கிறார்.

 

97) உழைப்பு சக்தி (Labour-Power) என்றால் என்ன?

முதலாளியிடம் தொழிலாளி விற்பது உழைப்பை அல்ல, உழைப்பு சக்தியை தான் விற்கிறார். உழைப்பு சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு சரக்கு ஆகும். உழைப்பு சக்தி எல்லாக் காலங்களிலும் கூலி உழைப்பாக அதாவது சுதந்திர உழைப்பாக இருக்கவில்லை. முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளி தன் உழைப்பை விற்பதற்குச் சுதந்திரம் பெற்றவராக இருக்கும் நிலையிலேயே உழைப்பு சக்தியை சரக்காக முதலாளிக்கு விற்கிறார். உழைப்புக்கும்உழைப்பு சக்திக்கும் உள்ள வேறுபாட்டை உபரிமதிப்பு பற்றிய விளக்கத்தில் அறிந்து கொள்ளலாம். உழைப்பு சக்தி என்ற மார்க்சின் இந்தக் கண்டுபிடிப்பே முதலாளித்துவத்தின் சுரண்டலை முழுமையாக வெளிக் கொண்டுவந்தது.

 

98) உபரி மதிப்பு (Surplus-Value) என்றால் என்ன?

முதலாளிகள் செல்வம் சேர்ப்பதற்கே உற்பத்தியில் ஈடுபடுகின்றனர், இந்தச் செல்வம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வாறு சேருகிறது என்பதை மார்க்ஸ் உபரிமதிப்பு என்ற கருத்தாக்கத்தால் விளக்கினார். தொழிலாளியின் உபரி உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட மதிப்புதான் உபரி மதிப்பாகும். தொழிலாளிக்கு கொடுக்கப்படாத கூலியால் இந்த உபரி மதிப்புத் தோற்றுவிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் சுரண்டல் இந்த உபரி உழைப்பில் தான் அடங்கியிருக்கிறது.

 

99) உபரி உழைப்பு என்றால் என்ன?

முதலாளி உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தமக்குத் தேவைப்படுவைகளைச் சந்தையில் வாங்குகிறார். இயந்திரம், கச்சாப்பொருள், எரிபொருள் இவைகளைக் கொண்டும் உழைப்பதற்கு உழைப்பாளியையும் சந்தையில் வாங்குகிறார். அடுத்து உற்பத்தியைத் தொடங்குகிறார். இயந்திரங்கள், கருவிகள் இயங்குகின்றன, இதனைத் தொழிலாளி இயக்குகிறார். இயந்திரத்தின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் மற்றும் எரி-பொருள் ஆகியவையில் அடங்கியுள்ள பழைய மதிப்பு, புதிய சரக்கில் இடம்பெயற்கிறது. பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே, புதிய மதிப்பு எதுவும் அது படைக்கவில்லை. தொழிலாளியின் உழைப்புக்குக் கூலி கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் சரக்கில் மதிப்பேற்றப்பட்டுள்ளது. சந்தையில் விளைபொருளான சரக்கு விற்று முதலாளிக்கு இலாபம் கிடைக்கிறது. இந்த இலாபம் என்கிற கூடுதல் மதிப்பு எங்கிருந்து வந்தது என்றால் அது தொழிலாளியின் உபரி உழைப்பால் வந்தது என்கிறார் மார்க்ஸ்.

 

100) ஒன்றும் புரியவில்லை சற்று விளக்க முடியுமா?

உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்புச் சாதனங்களைப் போலவே, உழைப்பாளியின் உழைப்பு சக்தியையும், முதலாளி விலை கொடுத்து வாங்குகிறார். முதலாளியால் வாங்கப்பட்ட உழைப்பு சக்தி முதலாளிக்கே சொந்தமாகும். இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் தொழிலாளி முதலாளியிடம் வேலைக்குச் சேர்கிறார். அதனால் நாள் முழுமைக்கும் உழைக்கும்படி முதலாளி கட்டாயப்படுத்துகிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள் முதலாளியால் உரிமையாக்கப்படுகிறது.

 

101) இதில் எங்கே உபரி உழைப்பு வருகிறது?

பொறுமை பொறுமை. படிப்படியாகச் செல்வோம். ஒரு முதலாளி வேலை செய்த தொழிலாளிக்கு நாட்கூலியாக ரூ.500/- கொடுக்கிறார். இந்த ரூபாயின் மதிப்பிற்கு அந்தத் தொழிலாளி வேலை செய்ய வேண்டும் என்றால் அவர் முதல் இரண்டு மணி நேரத்திலேயே அதன் மதிப்பிற்கான உழைப்பை செலுத்திவிடுகிறார். மதிப்புக்கு மதிப்பு தான் பரிவர்த்தனை நடத்தப்படுகிறது என்றால், இப்போது தொழிலாளி அன்றைய உழைப்பில் இருந்து விடுபட்டு வெளியேறலாம். அப்படிச் செய்தால் எந்தக் கூடுதல் மதிப்பும் விளைபொருளில் சேர்வதில்லை. முதலாளிக்கு இலாபம் எதுவும் கிடைப்பதில்லை. இதனை அறிந்த முதலாளி தொழிலாளியை வெளியேற அனுமதிப்பதில்லை. தொழிலாளியின் உழைப்பை வாங்கிய முதலாளி நாள் முழுமைக்கும் உழைப்பதற்குக் கட்டாயப்படுத்துகிறார். இங்கே தான் மார்க்சின் புதிய கண்டுபிடிப்பு அடங்கியிருக்கிறது.

 

102) அது என்ன புதிய கண்டுபிடிப்பு?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை. அதாவது தொழிலாளியின் உழைப்பை மார்க்ஸ் இரண்டாகப் பிரிக்கிறார். தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பது அவசியமான உழைப்பு நேரம், மீதமுள்ள நாள் உழைப்பு என்பது உபரி உழைப்பு.

 

103) இன்னும் புரியவில்லையே?

தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல, விற்றது உழைப்பு சக்தி என்கிறார் மார்க்ஸ். இந்த உழைப்பு சக்திக்கே கூலி கொடுக்கப்படுகிறது. உற்பத்தியின் போது இழந்த உழைப்பு சக்தி மீட்டுக் கொள்வதற்கே அதாவது மறுவுற்பத்தி நடைபெறுவதற்குக் கொடுக்கப்படுவதே கூலி ஆகும். உழைப்பாளிக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் கொடுக்கப்பட்ட கூலியாகும். இந்த மறுவுற்பத்தியின் மூலமே எதிர்காலத்தில் தேவைப்படும் உழைப்பாளிகள் தோன்றுகிறார்கள். இந்தக் கூலிக்கான உழைப்பு நேரமே அவசியமான உழைப்பு நேரம். இந்த அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாய் உழைக்கும் நேரம், உபரி உழைப்பு நேரம் ஆகும். இந்த உபரி உழைப்பு நேரத்தில் உருவாக்கப்பட்ட மதிப்பே உபரி மதிப்பு. இதனை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையை முதலில் படிக்க வேண்டும். அதில் இந்த உபரி மதிப்புக் கோட்பாட்டைச் சிறு நாடக பாணியில் விளக்கப்பட்டுள்ளது. முன்னுரையைப் படித்துவிட்டு, அந்நூலைப் படிக்க வேண்டும். அதற்கு அடுத்து “கூலி விலை இலாபம்” என்கிற மார்க்சின் நூலைப் படித்தால் மூலதனம் நூலில் காணப்படும் பகுதியை படிப்பதற்குத் தயாராகிவிடலாம்.

 

104) மாறா மூலதனம் (Constant Capital) என்றால் என்ன?

முதலாளி தமது உற்பத்திக்குத் தேவைப்படுகிற இயந்திரம், கருவிகள், கச்சாப்பொருள், தொழில் செய்திடும் இடம் போன்றவற்றிற்குச் செலுத்தும் மூலதனத்தின் பகுதி மாறா மூலதனம் என்று பெயர். ஏன் என்றால் இயந்திரம், கருவி ஆகியவற்றின் தேய்மானம், பயன்படுத்திய கச்சாப் பொருள் போன்றவற்றின் மதிப்பு புதிய பொருளில் இடம் பெயர்கிறது அவ்வளவே. அதன் மதிப்பு, பூஜ்யம் என்கிறார் மார்க்ஸ். மதிப்பை தோற்றுவிக்காததால் இந்த மூலுதனத்திற்கு மாறா மூலதனம் என்று பெயர்.

 

105) மாறும் மூலதனம் (Variable Capital) என்றால் என்ன?

       முதலாளியால் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் பணம் மாறும் மூலதனம். ஏன் என்றால் இந்த மூலதனமே உபரி மதிப்பைப் படைக்கிறது. அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக, தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே உபரி மதிப்பைப் படைக்கிறது. உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம், கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது.

 

106) முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்படுகிறது?

உற்பத்தியில் ஈடுபடும் தனித்தனி முதலாளிகள் சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படுகிறது என்பதை அறிந்திடாமல், மிகையாக உற்பத்தி செய்திடுகின்றனர். சந்தையில் தேங்கும் இந்த மிகை உற்பத்தியால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. தேங்கிய சரக்கை விற்று மறுவுற்பத்திக்கு செல்ல முடியாமல் திணருகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தாக்குப்பிடித்த அல்லது புதிய முதலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் ஒரு நெருக்கடியை முதலாளித்துவப் பொருளாதாரம் சந்திக்கிறது. தேக்கம், செழுமை, மிகையுற்பத்தி, நெருக்கடி என்ற சுற்றை முதலாளித்துவம் தொடர்ந்து சந்திக்கிறது. இந்த நெருக்கடியின் உச்சமே சமூக மாற்றத்திற்குக் காரணமாகிறது.

 

107) சமூக மாற்றம் என்றால் என்ன?

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டும் போது பழைய உற்பத்தி உறவுகள் பழைமைப்பட்டுப் போவதுடன் புதிய வளர்ச்சிக்கு தடையாகவும் ஆகிறது

முதலாளித்துவத்தின் மேம்பட்ட வளர்ச்சி கட்டத்தில், சமூகமயமான உற்பத்திக்கும் தனிசொத்துடைமையின் அடிப்படையிலான பழைய வினியோக முறைக்கும் முரண்முற்றி வளர்ச்சிக்குத் தடையாகிறது. வளர்ச்சிக்குத் தடையாகப் போன முதலாளித்தவத் தனியுடைமை சமூகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கம் புதிய அரசை அமைத்து, சொத்துகளைச் சமூகச் சொத்தாக மாற்றுகிறது.

இதனை மார்க்ஸ், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில் முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடமை பறிப்போரின் உடமை பறிக்கப்படுகிறது என்று தமது மூலதனம்” நூலில் எழுதினார்.

 

108) உற்பத்தி முறைகள் என்றால் என்ன?

சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை, அடிமை சமூக உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோஷலிச சமூக உற்பத்தி முறை என்று இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது. அந்தந்த உற்பத்தி முறையை நிர்ணயிப்பது அந்தந்த சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் மீதான சொத்துடமை ஆகும். உற்பத்திச் சாதனங்களின் உடமையே அந்தந்த உற்பத்தி உறவுகளை அமைக்கிறது.

முதலில் கூறியபடி அரசியல் பொருளாதாரம் என்பது அந்தந்த கட்டத்தின் உற்பத்தி முறையில் காணப்படும் உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றைப் பரிசீலனை செய்வதாகும்.

 

109. அரசியல் பொருளாதாரத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய நூல்கள் யாவை?

       மார்க்ஸ் எழுதிய நூல்கள் கூலியுழைப்பும் மூலதனமும், கூலி விலை லாபம், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு (முன்னுரை). எங்கெல்ஸ் எழுதிய நூல் காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு", மார்க்சின் மூலதனம் பற்றி..., பி.நிக்கிடின் எழுதிய நூல் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்ஜீலியன் போர்ச்சார்ட் எழுதிய நூல் மக்கள் மார்க்ஸ்த.ஜீவானந்தம் எழுதிய நூல் மார்க்ஸின் மூலதனம் - வாசிப்புக்கு ஒரு திறவுகோல்.

 - அ.கா. ஈஸ்வரன்


இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...